Skip to main content

போலீசார் எனக் கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

andhra pradesh real estate agent police incident in dharmapuri 

 

ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீசார் எனக் கூறி மர்ம நபர்கள் நான்கு பேர், நில தரகர்கள் இருவர் என கூட்டு சேர்ந்து நூதன முறையில் 30 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பூமா செட்டி (வயது 60). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் நிலம் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ள நில தரகர்களை அணுகியுள்ளார். அதற்கு நில தரகர்கள் அதியமான் கோட்டையில் புறவடை ஜங்ஷன் அருகே நிலம் விற்பனைக்கு இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்று நிலங்களைக் காட்டியுள்ளனர். அந்தப் பகுதியில் ஒரு நிலத்தைப் பார்த்த பூமா செட்டி, அந்த நிலத்தை வாங்க முடிவு செய்தார். மேலும், நிலத்தை கிரயம் செய்யும்போது பணத்தை கொடுப்பதாகக் கூறிவிட்டு ஹைதராபாத்துக்கு திரும்பினார்.

 

இந்நிலையில், இரு நாட்களுக்கு முன்பு பூமா செட்டியை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட நில தரகர்கள், 4ம் தேதி கிரயம் செய்து கொள்ளலாம் என்றும் 30 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு தர்மபுரிக்கு வருமாறும் கூறியுள்ளனர். இதையடுத்து நில தரகர்கள் சொன்னபடியே பணத்தை எடுத்துக்கொண்டு பூமா செட்டி மற்றும் அவருடைய உறவினர் பூமாசெட்டி பாபு (வயது 52) ஆகியோர் தர்மபுரிக்கு வந்தனர். அவர்களை நில தரகர்கள் இருவர் ஒரு காரில் ஏற்றிக்கொண்டு புறவடை ஜங்ஷன் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டிய ஒரு காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் நான்கு பேர் தங்களை போலீஸ்காரர்கள் என்று கூறியுள்ளனர். பின்னர் அவர்கள், நில தரகர்கள் வந்த காரை சோதனை செய்தனர். அப்போது பூமா செட்டி வைத்திருந்த பெட்டியில் 30 லட்சம் ரூபாய் இருந்தது தெரிய வந்தது.

 

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் சமயத்தில் அங்குதான் பணத்தை எடுத்துச் செல்வதாக கூறிய அவர்கள், பூமா செட்டியையும் அவருடன் வந்த பூமா செட்டி பாபுவையும் காரை விட்டு கீழே இறங்கும்படி கூறினர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்ட மர்ம நபர்கள், நில தரகர்களுடன் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூமா செட்டி, இதுகுறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் வந்தவர்கள் போலீசாரே இல்லை என்பதும் நில தரகர்களும், போலி போலீசாரும் கூட்டு சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பூமா செட்டியிடம் தொலைபேசியில் பேசிய நில தரகர்களின் தொலைபேசி எண்ணை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் மாற்றம்; தொண்டர்கள் கொண்டாட்டம்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Dharmapuri pmk candidate change Celebration of volunteers

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று (21.03.2024) வெளியானது. அதில் பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தருமபுரி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அரசாங்கம் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக அக்கட்சியின் தலைவர் அன்புமணியின் மனைவியும், பசுமை தாயகம் அறக்கட்டளையின் தலைவருமான சௌமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தருமபுரியில் பா.ம.க.வினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.

Next Story

தொடரும் சிறார் பாலியல் கொலை சம்பவங்கள்; தர்மபுரியில் மீண்டும் அதிர்ச்சி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Continued incidents of againt child ; Shock again in Dharmapuri

அண்மையில் புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கஞ்சா போதை இளைஞர் மற்றும் முதியவர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து இதேபோன்ற சிறார் பாலியல் கொலை சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் சிறுவன் ஒருவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது மிட்டா ரெட்டி ஹள்ளி கிராமம். அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்த ஐந்தாம் வகுப்பு சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார். பங்குனி உத்திரத்திற்காக பழனி மலைக்கு செல்வதற்காக அந்த சிறுவன் மாலை அணிந்து இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சிறுவன் காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்களும் பெற்றோர்களும் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை.

அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவன் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றதை சிலர் பார்த்ததாக கூறியுள்ளனர். அன்று மாலை வரை சிறுவன் கிடைக்காததால் சிறுவனின் பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சிறுவனை அழைத்துச் சென்றதாக கூறப்பட்ட பிளஸ் 2 மாணவனை அழைத்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் பிளஸ் டூ மாணவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், இதனை வெளியே சொல்லி விடுவான் என்ற பயத்தில் கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூர சம்பவமும் வெளியே வந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த பிளஸ் டூ மாணவனை அழைத்துச் சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சிறுவனின் சடலத்தை மீட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.