Skip to main content

தமிழ்நாடு போதைக்காடாகி விடும்; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுங்கள் - அன்புமணி

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

anbumani talk about  chennai high court pan masala judgement

 

குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்ற ரத்து செய்துள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் மெல்லும் புகையிலை வகைகளை தடை செய்ய தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்றும், அவற்றை தடை செய்து உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்துள்ள அரசாணை செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை ஒழிப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும்.

 

தமிழ்நாட்டில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை செய்து கடந்த 2018-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த அரசாணைக்கு எதிராக புகையிலை நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ்பாபு ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

 

மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் 30(2)(ஏ) பிரிவின்படி புகையிலை பொருட்களுக்கு நிரந்தரத் தடை விதிக்க உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையில் தான் இந்தத் தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, புகையிலை என்பது உணவுப் பொருள் அல்ல என்ற புகையிலை நிறுவனங்களின்  வாதத்தையும் உயர்நீதிமன்றம் ஏற்றிருக்கிறது.

 

இவை இரண்டுமே தவறாகும். புகையிலைப் பொருட்கள் மீதான தடை நீக்கம் தமிழ்நாட்டை போதைக் காடாக்கி விடும். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த காலத்திலேயே ஆண்டுக்கு 3,000 டன்னுக்கும் கூடுதலாக குட்கா விற்பனை செய்யப்படுவதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. குட்கா மீதான தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் அனைத்து பெட்டிக் கடைகளிலும் குட்கா விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்கி விடும். அதன் தீயவிளைவுகள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை.

 

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய், சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல வகை புற்றுநோய்களும், ஆஸ்துமா, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதை உலக சுகாதார நிறுவனமும்,  இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழுவும் (ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சிகளின் மூலம் உறுதி செய்திருக்கின்றன.

 

இந்தியாவில் மதுவுக்கு அடுத்தபடியாக மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவது புகையிலை தான். புகையிலை பழக்கத்தால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம்-2006, சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டம் (Cigarettes and Other Tobacco Products Act -COPTA) ஆகியவை நிறைவேற்றப்பட்டன. இந்த இரு சட்டங்களின்படி இந்தியா முழுவதும் 24 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் குட்கா தடை செய்யப்பட்டிருக்கிறது.

 

புகையிலைப் பொருட்கள் மீதான தடையை அகற்ற வேண்டும் என்பதற்காக புகையிலை நிறுவனங்கள் பின்பற்றும் ஒரே ஆயுதம் குட்கா, புகையிலை போன்றவை உணவுப் பொருட்கள் அல்ல என்று வாதிடுவது தான். ஆனால், இது தொடர்பான வழக்குகளை 2000-ஆவது ஆண்டுகளின் இறுதியில் விசாரித்த உச்சநீதிமன்றம், புகையிலைப் பொருட்களும் உணவு வகைகள் தான் என்று தீர்ப்பளித்துள்ளது. இதையும்,  புகையிலையின் தீமைகளையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது செல்லும் என்று தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பது ஆச்சரியமளிக்கிறது.

 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்போது எத்தகைய வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டதோ, அதே போன்ற வழக்கு ஒன்றில் கடந்த 30.11.2021 அன்று தீர்ப்பளித்த தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, நீதிபதி இராஜசேகர ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்ய உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் உண்டு என கூறியிருக்கிறது. மெல்லும் பொருட்கள் அனைத்தும் உணவுப் பொருட்கள் தான் என்பதால் புகையிலையும் உணவுப் பொருள் தான் என்றும் தெலுங்கானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

 

‘‘ஒட்டுமொத்த உலகமும் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவுக்கு எவ்வளவு பேர் உயிரிழக்கிறார்களோ, அதை விட அதிகம் பேர் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் உயிரிழக்கின்றனர். புகையிலை காரணமாக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுநலன் கருதி பிறப்பிக்கப்பட்டுள்ள குட்கா தடை சட்டத்தில் குறுக்கிட நீதிமன்றம் விரும்பவில்லை. மனித உயிர்களை காக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள அறிவிக்கையில் குறை காண கூடாது’’ என்று தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.  சென்னை உயர்நீதிமன்றமும் இதே போன்ற தீர்ப்பைத் தான் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் முரணான தீர்ப்பை வழங்கியுள்ளது.

 

தமிழ்நாட்டில் குட்கா தடை செய்யப்பட்டதற்கும் நான் தான் காரணம். 2011 முதல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு குட்கா தடை செய்யப்பட வேண்டியதன் நோக்கத்தை வலியுறுத்து தொடர்ந்து பல கடிதங்கள் எழுதியதன் பயனாகவே  தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டது. அந்தத் தடை அகற்றப்படக் கூடாது. அதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். மற்றொருபுறம் குட்கா தடை செய்யப்பட  காரணமான இரு சட்டங்களையும் இன்னும் கடுமையாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.