Skip to main content

கரோனா பரவலைத் தடுக்க ஒரே தீர்வு! அன்புமணி சொல்லும் யோசனை

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

 

பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை  தீவிரப்படுத்த வேண்டிய அவசியமும், அவசரமும் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா வைரசின் தீவிரத்தையும், அது பரவும் வேகத்தையும் வைத்துப் பார்க்கும் போது, மூன்றாம் நிலை நோய்ப் பரவலைத்  தடுக்க, நான் ஏற்கனவே கூறியவாறு அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு செய்வது தான் ஒரே தீர்வாகும்.


 

anbumani ramadoss




கொரோனா வைரஸ் நோய் பரவும் வேகம் கடந்த சில வாரங்களில் மேலும் அதிகரித்திருக்கிறது. கடந்த திசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய் கடந்த 6-ஆம் தேதி வரை 91 நாடுகளில் ஒரு லட்சத்து 645 பேரைத் தாக்கியிருந்தது. அவர்களில் 3411 பேர் உயிரிழந்திருந்தனர். அதற்கு பிறகு நேற்று வரையிலான 12 நாட்களில் கூடுதலாக 81 நாடுகளில் பரவியதுடன், புதிதாக  ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேரைத் தாக்கியிருக்கிறது. இந்த கால இடைவெளியில் மட்டும் கூடுதலாக  5376 பேர் உயிரிழந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8787 ஆக அதிகரித்துள்ளது. சுருக்கமாக கூற வேண்டுமானால் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய முதல் 100 நாட்களில் ஏற்பட்டதை விட கூடுதல் பாதிப்பு கடந்த 10 நாட்களில் ஏற்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் எவ்வளவு கொடுமையானது; ஆபத்தானது; பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதற்கு இந்த புள்ளி விவரங்கள் தான் சாட்சியாகும். இந்த ஆபத்தை இந்தியா, குறிப்பாக தமிழகம் உணர வேண்டும்.
 

அமெரிக்கா உள்ளிட்ட உலகில் பல வளர்ந்த நாடுகளே கொரோனா பாதிப்பை தடுக்க முடியாமல் திணறி வருகின்றன. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதிகள் இல்லாமல், 80 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களை இறக்க அனுமதிக்கும் அவல நிலை அங்கு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையில்  இன்றைக்குள் சீனாவை விஞ்சி, இத்தாலி முதலிடம் பிடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, ஈரான், சுவிட்சர்லாந்து, ஹாலந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையளிக்கக் கூடியவையாக உள்ளன. இந்த அவல நிலைக்குக் காரணம் அந்நாடுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடின்றி பரவும் நிலையை அந்த நாடுகள் அனுமதித்தது தான்.


 

 

இந்தியாவில் அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளையும், உயிரிழப்புகளையும் நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள், மருத்துவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை கொரோனா பேரழிவை எதிர்கொள்வதற்கு போதுமானதாக இல்லை. ஆகவே, கொரோனா வைரஸ் பரவலில், இப்போது இரண்டாவது நிலையில் இருக்கும் இந்தியா, மூன்றாவது நிலையான சமுதாயப் பரவலாக மாறுவதைத் தடுப்பதன் மூலம் தான் மிகப்பெரிய பேரழிவை தடுக்க முடியும். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களை பிரித்து வைப்பதன் மூலம் மூன்றாம் நிலை சமுதாயப் பரவல் தமிழகத்தில் நிகழாமல் தடுக்க முடியும்.
 

தமிழகத்தில் வணிக வளாகங்கள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டிருக்கும் போதிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இது போதுமானதல்ல. தமிழகத்திலுள்ள அனைத்து கடைகளை மூடுவதுடன், போக்குவரத்தையும் ரத்து செய்து முழு அடைப்பை மேற்கொள்ள வேண்டும்.  பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு ஊரடங்குக்கு இணையான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அடுத்த 3 வாரங்களுக்கு இத்தகைய சூழலை ஏற்படுத்துவதன் மூலம் தான் கொரோனா வைரசின் சமுதாயப் பரவலையும், அதன் மூலமான மனிதப் பேரழிவையும் தடுக்க முடியும்.


 

 

இத்தகைய நடவடிக்கைகளால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படுவதையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வாழ்வாதார இழப்பு ஏற்படுவதையும் தடுக்க முடியாது. எனினும், கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்படும் உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது இது பெரிதல்ல. முழு அடைப்பு காரணமாக சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை மத்திய, மாநில அரசுகள் ஈடு செய்ய வேண்டும். கோரோனா பாதிப்பு விலகி, இயல்பு நிலை திரும்பும் வரை அனைத்து வகையான வங்கிக் கடன் தவணைகளும் ஒத்திவைக்கப்படுவதுடன், வட்டித் தள்ளுபடியும் வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரங்களை இழந்து வாடும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அரசே வழங்க வேண்டும். மற்ற மக்களும் முழு அடைப்புக் காலத்தில் அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை சேகரித்து வைத்துக் கொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். தேவையான உதவிகளையும் வழங்க வேண்டும்.
 

ஒரு மருத்துவராகவும், மத்திய சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையிலும் நான் தெரிவிக்கும் இந்த தடுப்பு யோசனைகள் அச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இதைத் தவிர வேறு வழியில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரசை தடுக்க இத்தகைய நடவடிக்கைகள் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, மனிதப் பேரழிவை தடுக்க, வருமுன் காக்க தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் அடுத்த 3 வாரங்களுக்கு முழு அடைப்பு மற்றும் ஊரடங்கை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.