சமீபத்தில்தான், கோவை விமானப் படை முகாமில் பயிற்சிக்காக வந்த இளம்பெண் அதிகாரியை விமானப் படை அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த பரபரப்பு சம்பவம் நடந்தது. பிறகு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த 29 வயது கல்லூரி பேராசிரியை ஒருவர், தசரா விடுமுறைக்காக பெங்களூருவில் இருந்து 13ஆம் தேதி மாலை புறப்பட்டு கேரள மாநிலம் கோட்டயத்துக்கு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார். அதே ரயிலில் அந்த முன்பதிவு பெட்டியில் பேராசிரியைக்கு எதிரே இந்திய விமானப்படையில் ஹவில்தாராக பணிபுரியும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரைச் சேர்ந்த 28 வயது பிரப்ஜோட் சிங் என்பவரும் பயணம் செய்தார்.
அப்போது தனியாக பயணம் செய்த அந்த பேராசிரியையிடம் பிரப்ஜோட்சிங் பேச்சு கொடுக்க தொடங்கினார். மத்திய அரசு அதிகாரி என்பதால் மரியாதை கொடுத்து பேசியிருக்கிறார் அந்த இளம் பேராசிரியை. தொடர்ந்து பேசிய பிரப்ஜோட் சிங், பாலியல் ரீதியான வார்த்தைகளை சாதாரனமாக பேசத் தொடங்க, தவறான அர்த்தத்துடன் பேசுவதை உணர்ந்து பேசாமல் அவரது பெர்த்தில் படுத்துக்கொண்டார் அந்த இளம் பெண். ஆனால், விடாத விமானப் படை அதிகாரி தனது கால் மற்றும் கைகளால் அந்த பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் ரயிலில் மற்ற அனைத்து பயணிகளும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
பிரப்ஜோட் சிங் அந்தக் கல்லூரி பேராசிரியையிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டே வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், அந்த கல்லூரி பேராசிரியை, விமானப்படை அதிகாரியை எச்சரித்திருக்கிறார். ஆனால், அந்த அதிகாரி எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதுவரை அமைதி காத்திருந்த அந்த இளம் பேராசிரியை, ஈரோடு ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும் உடனடியாக ரயிலிலிருந்து இறங்கி ஈரோடு ரயில்வே போலீஸ் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி, அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்குச் சென்று விமானப்படை அதிகாரி பிரப்ஜோட்சிங்கை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வாருங்கள் என அழைத்துள்ளனர். அதற்கு அந்த அதிகாரி, “நான் சென்டரல் கவர்மென்ட் ஆபீசர். தமிழ்நாடு ஸ்டேட் போலீஸ் கூப்பிட்டா எல்லாம் நான் வர முடியாது” என ரயில்வே போலீசாரை மிரட்ட, அந்த நபரை ரயிலைவிட்டு குண்டுக் கட்டாக தூக்கி வந்தனர் ரயில்வே போலீசார். பிறகு அந்த நபரிடம் போலீசார் விசாரனை செய்தனர்.
விசாரணையில், அவர் அந்தக் கல்லூரி பேராசிரியையிடம் ஓடும் ரயிலில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவுசெய்து பாலியல் அத்துமீறல், மிரட்டல், பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுசெய்து பிரட்ஜோட்சிங்கை கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோபிசெட்டிப்பாளையம் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டார்.