Skip to main content

மேலும் 15 பேர் கொண்ட கமிட்டி என்ன ஆச்சு... அதிமுக உயர்நிலை கூட்டத்தில் காரசாரம்!

Published on 18/09/2020 | Edited on 19/09/2020

 

At the AIADMK high level meeting

 

அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை எழுந்ததை அடுத்து முதல்முறையாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்ததுள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

முன்னதாக முக்கிய நிர்வாகிகள் வருகை தந்த நிலையில், தற்போது முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர், ஓ.பி.எஸ் ஆகியோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இருவரின் வருகையின் பொழுதும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஒருபுறம் 'இ.பி.எஸ் தான் நிரந்தர முதல்வர்' என முழக்கம் எழுப்ப, மறுபுறம் ஓ.பி.எஸ்ஸின் ஆதரவாளர்கள் 'அம்மாவின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்' என முழக்கமிட்டனர். 

இந்தக் கூட்டத்தில் இப்போதே முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூறினார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதெல்லாம் தேவையில்லை அ.தி.மு.க.வில் எப்போதும் அப்படி நடந்ததில்லை என்றார். அதற்கு, அப்படி என்றால் நீங்கள் என்ன அம்மாவா எனக் குரல் வந்தது. அதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா இறந்த பிறகு, கடந்த மூன்று வருடமாக ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பவன் நான், எனக்குத் தெரியும். இப்போது இந்தப் பிரச்சனையை எடுத்தால் அது தி.மு.க.விற்கு சாதகமாகப் போய்விடும் என்றார். ஆனால் அதற்கு அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்களோ இந்தப் பிரச்சனையைக் கிளப்புவதே தி.மு.க.தான். யார் முதல்வர் வேட்பாளர் என்றுதான் பிரச்சனை எழுந்துள்ளது. ஓரிரு மாதங்களில் சசிகலா விடுதலையாக உள்ளார். அப்பொழுது நிலைமை என்னவாக இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆகவே எம்.ஜி.ஆருக்கு பிறகு, அம்மாவிற்குப் பிறகு, அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவரை முதல்வர் வேட்பாளர் எனத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறினார்கள். அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதற்கெல்லாம் காலம் கடந்து விட்டது. இப்பொழுது தமிழக மக்கள் மத்தியில் அதைக் கூற முடியாது எனக் கூறினார்.

தொடர்ந்து இரு தரப்பிலும் பேசும்பொழுது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், கமிட்டி போடுவதாக நீங்கள் கூறினீர்களே... கமிட்டி என்ன ஆனது. இப்போது உள்ள குழுவில் சேர்ந்து 15 பேர் கொண்ட கமிட்டியை அமைக்க வேண்டும் அல்லவா. அந்த 15 பேர் கொண்ட கமிட்டி அமைப்பது எப்போது எனக் கேட்கப்பட்டபோது. அதற்கு உடனடியாக பதில் கூறிய எடப்பாடி பழனிசாமி, கமிட்டியெல்லாம் இப்பொழுது போட முடியாது. கமிட்டி போட்டு அந்த கமிட்டி பேசுவதை எல்லாம் நான் கேட்க முடியாது எனக் கூறினார்.

 

Ad


அதற்கு அப்படியெல்லாம் கூறக்கூடாது என ஓ.பி.எஸ் தரப்பு கூறியது. ஒரு கட்டத்தில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகிய இருவரும் காரசாரமாக மோதிக்கொண்ட பிறகு, கமிட்டி இப்போது இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார். அதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், கமிட்டி இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை எனக் கூறினார். இது தொடர்பாக அ.தி.மு.க செயற்குழுவைக் கூட்டி முடிவெடுத்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிசாமி கூற, அதுவும் நல்லதுதான். எங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என பன்னீர்செல்வம் தரப்பு கூறியது. இந்தநிலையில் கமிட்டி போடப்படுமா அல்லது போடப்படாத என்பதுதான் அ.தி.மு.க.வில் மிகப் பெரிய விவாதமாக தொடங்கியிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.