Skip to main content

அதிமுக ஆட்சியில் அரசு வேலைக்கு விலை! -தோண்டத் தோண்ட கிளம்பும் மோசடிகள்!  

Published on 24/04/2022 | Edited on 24/04/2022

 

AIADMK government prices for government jobs!


அரசியல் பிரபலம் ஒருவரது உறவினர் அடையாளம் இருந்தாலே போதும், சிலர் தேடிவந்து வலையில் விழுந்து லட்சங்களை இழக்கின்றனர். நிரந்தரமாகத் தனக்கென்று அப்படி ஒரு அடையாளத்தைத் தக்கவைத்திருப்பவரையும், மோசடிக்கு ஆளானவர்களையும் தெரிந்துகொள்வோம்!

 

குறுக்கு வழியில் பயணித்துப் பலன்பெற வந்தவர்களிடம் லட்சம் லட்சமாக கோடிகளைக் கறந்த நல்லதம்பியும் புலம்பத்தான் செய்கிறார். ‘விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரான என் அண்ணன் கா.ரவிச்சந்திரனும், கொடைக்கானல் மதர் தெரஸா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான என் அண்ணி வள்ளியும், சாகும் தருவாயிலுள்ள என்னை ஏமாற்றி நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். மோசடி செய்த இவ்விருவரிடம் உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்கச் செய்யுங்கள்.’ எனப் புகார் மூலம் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

AIADMK government prices for government jobs!

 

தனது அடையாளமாக நல்லதம்பி என்ன சொல்கிறார்?

 

நான், முன்னாள் சபாநாயாகர் காளிமுத்துவின் கடைசித்தம்பி ஆவேன்.  வழக்குரைஞராக,  விருதுநகர் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞராக, மதுரை உயர் நீதிமன்றத்தின் அரசு வழக்குரைஞராகப் பணி செய்துள்ளேன். அரசியலில் ஊராட்சி மன்றத் தலைவராக, ஒன்றிய கவுன்சிலராக, மாவட்ட கவுன்சிலராகப் பதவி வகித்துள்ளேன். என் மனைவி மாலதியும் மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். நல்லதம்பி என்ற விஜயநல்லதம்பி, தனது புகாரில் குறிப்பிட்டுள்ள இந்த அடையாளமே, லஞ்சம் கொடுத்து அரசு வேலையைப் பெற்றுவிடத் துடித்தவர்களை ஈர்த்து, லட்சங்களில் பணத்தை இழக்கவைத்துள்ளது.  

 

உடன்பிறந்த அண்ணன் ரவிச்சந்திரன் மற்றும் அண்ணி வள்ளி மீது நல்லதம்பி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் இவை -

 

AIADMK government prices for government jobs!

 

2016 முதல் 2019 வரை கொடைக்கானல் - மதர் தெரஸா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வள்ளி இருந்தார். அப்போது, பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் எழுத்தர் பணி பெற்றுத் தருவதாகச் சொல்லி, பலரிடமும் அதற்கான தொகைகளை ஏற்பாடு செய்யும்படி என்னிடம் கூறினார்கள்.  பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில், TNSET மதர் தெரஸா பல்கலைக்கழகம் மூலம் தேர்ச்சிபெற, போதுமணி, மங்கையர்க்கரசி, அன்புமணி ஆகியோருக்கு துணைவேந்தர் வள்ளி மூலம் நான் உதவினேன். இத்தகைய சேவைக்காக,   ரவிச்சந்திரன் மற்றும் வள்ளியிடம் பலர் பணம் கொடுத்தனர். தகுதியில்லாதவர்களை இவர்கள் தேர்ச்சி பெறவைத்த விபரம், மதுரை முனியசாமி போன்றோருக்குத் தெரியும். ஆவின் துறையில் பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தும் அதிகாரம் பெற்றது, மதர் தெரஸா பல்கலைக்கழகம். ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருந்தபோது, அவருடைய உதவியாளர் பாபுராஜ் மகன், ஆவின் மேலாளர் தகுதித் தேர்வில், தகுதியில்லாவிட்டாலும் தேர்ச்சியானது இப்படித்தான்.

 

கொடைக்கானல் விஜய் மனைவி சத்யா, கணினி உதவிப் பேராசிரியர் பணிக்கு முன்பணமாக ரூ.15 லட்சம் தந்தார். பெற்றுக்கொண்ட வள்ளி, மீதத்தொகை ரூ.10 லட்சத்தை ரெடி பண்ணச் சொல்லிவிட்டு, உதவிப் பேராசிரியர் கணிதம், வேதியியல் மற்றும் எழுத்தர் பணிக்கு வேறு ஆட்கள் இருந்தால் ஏற்பாடு செய்யச் சொன்னார். வேதியியல் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஸ்ரீஜா என்பவரிடம் ரூ.20 லட்சம், கணித உதவிப் பேராசிரியர் பணிக்கு சத்யா என்பவரிடம் ரூ.25 லட்சம் என மொத்தம் ரூ.45 லட்சத்தை என் அண்ணன் ரவிச்சந்திரனிடம் கொடுத்தார்கள்.  எழுத்தர் பணிக்காக ஜெனிபரிடம் ரூ.4 லட்சம், சந்திராவிடம் ரூ.5 லட்சம், கிருஷ்ணம்மாளிடம் ரூ.5 லட்சம், சுகன்யாவிடம் ரூ.5 லட்சம், கீர்த்தனாவிடம் ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.23 லட்சத்தை, நான் சொன்னதன் பேரில் விஜய் கொடுத்தபோது, அண்ணனுடன் அண்ணியும் உடன் இருந்தார்.  இதுபோக, ரவிச்சந்திரன் சாத்தூர் – மேட்டமலை பூபாலன், சாத்தூர் மணி ஆகியோரிடம் பஞ்சாயத்து கிளார்க் வேலைக்கு  ரூ.12 லட்சம் வாங்கினார்.

 

வாங்கிய பணத்துக்கு எந்த வேலையும் நடக்காத சூழலில், என்னுடைய அண்ணன் ரவிச்சந்திரனை சாத்தூர் சட்டமன்ற வேட்பாளராக, அதிமுக தலைமை அறிவித்தது. என்மூலம் பணம் கொடுத்தவர்கள் எனக்கு நெருக்கடி தந்தார்கள். நான் அண்ணன் ரவிச்சந்திரனிடம், அவரும் அண்ணியும் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கேட்டபோது,  ‘அதிமுக தலைமை தேர்தலுக்குப் பணம் கொடுக்கும். அந்தப் பணத்தில் செட்டில் செய்துவிடுகிறேன்.’ என்றார்.  அந்த வகையில், அவருக்கு அதிமுக தலைமை கொடுத்த ரூ.10 கோடியே 80 லட்சம் ரூபாயிலிருந்து, ரூ.25 லட்சத்தை ஊட்டியில் வைத்து என்னிடம் திருப்பிக் கொடுத்தார். தருவதாகச் சொன்ன மீதி பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். அண்ணி வள்ளியின் துணைவேந்தர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி அண்ணன் வாங்கிய பணத்தில்,  அண்ணியின் பெயரிலும், அவருடைய மகள் பெயரிலும் மதுரை, குறிஞ்சி நகரில் பல கோடி மதிப்பிலான வீடு, நத்தம் சாலையில் எலைட் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு, குடிசைமாற்று வாரியத்தில் 2 வீடுகள், சிவகாசி,   சித்துராஜபுரம் – வெம்பக்கோட்டை சாலையில் காலியிடம், சிவகாசி ஹவுசிங் போடு எதிரில் மகிழ் கிளினிக் காலியிடம் என வாங்கிக் குவித்திருக்கிறார்கள் எனப் பட்டியலிட்டுள்ளார் நல்லதம்பி.  

 

AIADMK government prices for government jobs!

 

நாம் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கா.ரவிச்சந்திரனைத் தொடர்புகொண்டோம்.

 

நல்லதம்பியைப் பத்தி புதுசா நான் சொல்ல வேண்டியது இல்ல. அவரு  புகார் கொடுத்தார்ன்னு போலீஸ் தரப்புல இருந்து கூப்பிட்டாங்கன்னா, நான் போய் விளக்கம் சொல்லிட்டு வரப்போறேன்.   காளிமுத்தண்ணன் பேரை களங்கப்படுத்திட்டு இருக்கான். எவ்வளவோ அசிங்கப்படுத்திட்டான்.  என் மனைவி வள்ளி பல்கலைக்கழகத்துல இருந்த  காலத்துல,  கல்வித்துறையில் ரொம்ப ஹானஸ்ட்டான துணைவேந்தர்ன்னு  பேர் வாங்கினவங்க.  ஒரு போஸ்டிங் போட்டால்கூட தவறாகிடும்ன்னு எந்த போஸ்டிங்கும் போடல. நல்லதம்பியை கட்சியைவிட்டு நீக்கிட்டோம்கிற காழ்ப்புணர்ச்சில பொய்யான புகார் கொடுத்திருக்காரு. அவரு பண்ணுன தவறுகளுக்கு எல்லாம் வேற யாரையாவது பழி சொல்லணும்னு பார்ப்பாரு.  இதுக்கு முன்னால, இப்படித்தான் ராஜேந்திரபாலாஜி மேல பழிபோட்டாரு.  இப்ப என்மேல பழிபோடறாரு.  ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்ல. நான் 2007-ல இருந்தே நல்லதம்பியோடு தொடர்புல இல்ல. அவருகூட பேச்சு இல்ல.  என்னுடைய ஒரே மகள் கல்யாணம் 2012-ல் நடந்தபோதுகூட நல்லதம்பிய கூப்பிடல.  காளிமுத்து அண்ணன் இருக்கும்போதே, அவருடைய கையெழுத்தை நல்லதம்பி தவறாப் பயன்படுத்தினார்ன்னு அண்ணனே சொன்னாரு. 2006-ல்,  அண்ணன் காளிமுத்து சபாநாயகரா இருந்தப்ப, அவருடைய கையெழுத்தை, அவருடைய லெட்டர்பேடை நல்லதம்பி தவறா பயன்படுத்தினாரு. நல்லதம்பி படிச்ச படிப்பு, அறிவு எல்லாத்தையும் மோசடிக்கு மட்டுமே பயன்படுத்திட்டு இருக்காரு. தமிழ்நாடு பூராவும் நல்லதம்பி மேல ஆயிரக்கணக்குல கேஸ் இருக்கு.” என்று நொந்தபடி அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.  
 

நல்லதம்பியின் கடந்த கால மோசடிகளில் சில...

 

2010-ல் இதே நல்லதம்பி,  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி பெற நான் கொடுத்த  ரூ.69 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்கள் என  உமா மகேஸ்வரி, வேளச்சேரி ரவி ஆகியோர் மீது புகார் அளித்தார். இது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என உமா மகேஸ்வரி, அப்போது காவல்துறையிடம் விளக்கம் அளித்தார்.

 

2016-ல் திண்டுக்கல் மா.மூ.கோவிலூரைச் சேர்ந்த பி.இ. பட்டதாரியான விக்னேஷ் என்பவருக்கு உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ரூ.15 லட்சம் வாங்கியிருக்கிறார், நல்லதம்பி. வேலை வாங்கித் தராத நிலையில் பணத்தைத் திருப்பிக்கேட்டபோது, ‘கவர்னர் கையெழுத்து வேண்டும். அதற்காக, கவர்னர் மகன் ரூ.2 லட்சம் கேட்கிறார் எனச் சொல்லி, கூடுதலாக ரூ.2 லட்சம் வாங்கி, மொத்தத் தொகை ரூ.17 லட்சத்தையும் ஏமாற்ற, விக்னேஷின் தந்தை பி.ரவிச்சந்திரன் திண்டுக்கல் எஸ்.பி.யிடம் புகாரளித்தார்.

 
 

AIADMK government prices for government jobs!

 

கடந்த 15-11-2021ல் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அளித்த புகாரில், அரசு வேலை பெற்றுத்தருவதாக பல்வேறு நபர்களிடமிருந்து ரூ.1.60 கோடி வசூலித்துக் கொடுத்தேன் என நல்லதம்பி குறிப்பிட்டுள்ளார். ‘அரசு வேலைக்கு உங்களிடம் பணம் கொடுத்தவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாகி நெருக்கடி தரும்போது,  யாராவது ஒரு வி.ஐ.பி.யின் பெயரைச் சொல்லி, அவரிடம் கொடுத்துவிட்டேன் எனப் பழிசுமத்தி, காவல்துறையிடம் புகாரளிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாக, உங்கள் மீதே குற்றச்சாட்டு திரும்புகிறதே?’ எனக் கேட்க, நல்லதம்பியின் கைபேசி (88XXXXXX99) எண்ணில் தொடர்புகொண்டபோது, நம்மைத் தவிர்த்தார். குறுந்தகவல் அனுப்பியதும் ‘நானே அழைக்கிறேன்..’ என்று பதிலளித்தவர், அடுத்து நம்மைத் தொடர்புகொள்ளவே இல்லை. தனது கருத்தையும் விளக்கத்தையும் பகிர நல்லதம்பி முன்வந்தால், வெளியிடத் தயாராகவுள்ளோம்.

 

ராஜேந்திரபாலாஜி வழக்கு விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை, ‘விஜயநல்லதம்பியை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?’ என விருதுநகர் மாவட்ட காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பியது. ஆனாலும், நல்லதம்பியை இன்றுவரையிலும் சுதந்திரமாக உலவவிட்டிருக்கிறது காவல்துறை. அதனால், ‘இந்தப் புகாரும் எந்த அளவுக்கு நேர்மையாக விசாரிக்கப்படும்?’ எனச் சந்தேகம் கிளப்புகிறார்கள்,  ரவிச்சந்திரன் தரப்பினர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.