திருச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “நிவர் புயல் காரணமாக, ஏற்கனவே, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 'வெற்றி வேல்' யாத்திரை ரத்து செய்யப்பட்ட நிலையில், இனி மீதமுள்ள மாவட்டங்களிலும் 'வேல் யாத்திரை', புயல் காரணமாக ரத்து செய்யப்படுகிறது. டிசம்பர் நான்காம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு மட்டும் நடத்திவிட்டு, டிசம்பர் 5 -ஆம் தேதி வேல் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறும்.
தமிழக அரசு 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கையாக, முழுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனது. புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளில் பா.ஜ.கவினர் ஈடுபடுவார்கள்.
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்து அ.தி.மு.க உறுதி செய்த நிலையில், பா.ஜ.க தரப்பில் கூட்டணி குறித்து தேசியத் தலைமைதான் அறிவிக்கும். எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து கலந்தாலோசித்து அறிவிக்கப்படும். அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில், பா.ஜ.கவிற்கு 40 தொகுதிகள் கேட்கப்பட்டது என்பது ஒரு யூகம்தான். எத்தனை இடங்கள் கேட்பது போன்றவை குறித்து இப்பொழுது ஜாதகம் பார்க்கத் தேவையில்லை. ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார். சரியான நேரத்தில் சரியான முடிவை ஆளுநர் அறிவிப்பார்” எனக் கூறினார்.