Skip to main content

ஜீவசமாதி ஆகப்போவதாகக் கூறி குழிக்குள் தவமிருந்த அகோரியால் பரபரப்பு!!

Published on 05/11/2020 | Edited on 05/11/2020

 

Agori sokkanathan theni

 

ஆண்டிபட்டி அருகே ஜீவசமாதி ஆகப்போவதாகக் கூறி குழிக்குள் தவமிருந்த அகோரியால் பரபரப்பு ஏற்பட்டது. 


தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி அருகே இருக்கும் மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மூன்றாவது மகன் அசோக் என்ற சொக்கநாதர், தனது 13 வயதில் ஊரைவிட்டு வெளியே சென்றுவிட்டார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சொக்கநாதர், உத்தரப்பிரதேச மாநிலம் காசிக்குச் சென்றுள்ளார். அங்கு சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று, அவர் அகோரியாக மாறியதாகக் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது சொந்த ஊரான மொட்டனூத்துக்கு வந்தார். அப்போது தனது கிராமத்தில் உள்ள மக்களிடம், தன்னை சிவனின் அருள் பெற்றவர் என்றும் கூறினார். இது தவிர, தான் முக்தியடைந்து ஜீவசமாதி ஆகப்போவதாகக் கூறிவந்தார்.
 

நேற்று முன்தினம் இரவு சிவனின் உத்தரவின்பேரில், அருகே உள்ள தோட்டத்தில் ஜீவசமாதி ஆகப்போகிறேன் என்றும் அதற்காகக் குழி தோண்டி அதில் இறங்கப் போவதாகவும் அங்குள்ள பக்தர்களிடம் சொக்கநாதர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்தனர். அதன்படி நேற்று காலை மொட்டனூத்துவில் உள்ள தனியார் தோட்டத்தில் 12 அடி ஆழக் குழி வெட்டப்பட்டது. பின்னர் அந்தக் குழியில் சிமென்ட் சிலாப் கல் வைத்து, சமாதி போன்ற அமைக்கப்பட்டது. அந்தச் சமாதிக்குள் சிவன் படம் மற்றும் ருத்ராட்ச மாலைகளை அடுக்கிவைத்து சொக்கநாதர் அதற்குள் அமர்ந்து தவம் இருக்கத் தொடங்கினார். 
 

Agori sokkanathan theni

 

சமாதியின் மேல் பகுதியை சிமெண்ட் கலவை வைத்து மூடி விடும்படி பக்தர்களிடம் கூறி உள்ளே அமர்ந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து ஜீவசமாதி அடையப்போவதாக குழிக்குள் இறங்கிய அகோரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

அப்போது, அவர் கூறியதாவது, நான் பல ஆண்டுகளுக்கு முன்பே காசிக்கு சென்று சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று அகோரி முனிவராக மாறி, 25 ஆண்டுகளாகவே உணவு சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் அகோரியாக மாறி சாகாவரம் பெற்றுள்ளேன். நான் 24 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டேன். தற்போது பல பிறவிகள் எடுத்து மீண்டும் உயிருடன் இருக்கிறேன். கடவுளின் உத்தரவின்பேரில் இப்பகுதிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்புவந்து அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற கோவில் திருப்பணி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். நேற்று முன்தினம் இரவு சிவன் எனக்கு ஒரு உத்தரவை வழங்கினார். 
 

அதன்படி நாட்டில் பல்வேறு கொடிய நோய்கள், பிணிக்கு ஆளாகி மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் வறட்சியும் நிலவுகிறது. மக்கள் நோயின்றி வாழவும் அவர்களைக் காப்பாற்றவும் வேண்டும். அதற்காக ஒன்பது நாட்கள் இந்தக் குழிக்குள் தவமிருக்கப்போகிறேன் என்று கூறினார். மேலும், தீபாவளிக்கு முந்தைய நாள் உயிருடன் வெளியே வருவேன் என்று கூறிவிட்டு அந்தக் குழியில் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டார். இப்படி அகோரி ஒருவர் ஜீவசமாதி ஆகப் போகிறார் என்ற தகவல் காட்டுத்தீ போல் அக்கம்பக்கத்தில் உள்ள கிராமங்களில் வேகமாகப் பரவியது. இதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக மொட்டனூத்து பகுதிக்கு குவிந்தவண்ணம் இருந்தனர்.   

 

cnc


அகோரியிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழிக்குள்  பூமி பூஜை செய்யக்கூடாது என்றும் அதற்கு அரசு அனுமதி இல்லை என்றும் கூறி வெளியே வரும்படி கூறினர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, குழிக்குள் இருந்த அகோரி சொக்கநாதர் வெளியே வந்து, அவர் ஜீவசமாதி ஆவதற்குரிய இடத்திற்கு அருகிலேயே சிவன் மற்றும் நந்தி சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப் போவதாகக் கூறி அங்கு அமர்ந்து கொண்டார்.

 

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பொது மக்களின் வருகை அங்கு அதிகமாக இருப்பதாலும் மீண்டும் அந்த அகோரி இறங்கவிடாமல் தடுப்பதற்காகவும் மொட்டனூத்து கிராமத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.