Skip to main content

செய்யாத குற்றத்திற்கு அபராதமா? ஆட்சியர் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதி! 

Published on 10/05/2022 | Edited on 10/05/2022

 

Aged couple made struggle at viluppuram collector office

 

விழுப்புரம் மாவட்டம், அவலூர்பேட்டை அருகிலுள்ள தேப்பிராம் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராசு(65), அவரது மனைவி ராஜி(58). இவர்கள் இருவரும் நேற்று திங்கள்கிழமை காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். திங்கள் கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மோகன் பொதுமக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடத்தி மனுக்கள் பெற்று கொண்டிருந்தார். 

 

அப்போது ராசு மற்றும் ராஜி இருவரும் திடீரென தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் ஓடிச்சென்று அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ”எங்கள் நிலத்திற்கு பக்கத்து நிலத்துக்குச் சொந்தக்காரர் தசரதன். அவர், சில மாதங்களுக்கு முன்பு எங்களது நிலத்தை தன்னிடம் விலைக்கு கொடுக்குமாறு கேட்டிருந்தார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு மரத்தில் தசரதன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 


இதையடுத்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் தசரதனை நாங்கள்தான் அடித்துக்கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டதாக கூறி எங்களை மிரட்டினார்கள். இதுகுறித்து தகவலை அவலூர்பேட்டை போலீசாரிடம் தெரிவித்தோம்.  காவல்துறையினர் அந்த கும்பலிடம் இருந்து எங்களை காப்பாற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்த போது எங்களிடம் 10 லட்சம் ரூபாய் பணமும் 2 ஏக்கர் நிலமும் நஷ்ட ஈடாக தரும்படி கேட்டு தசரதன் உறவினர்கள் மிரட்டல் விடுத்தனர். 


நாங்கள் செய்யாத தவறுக்கு அபராதம் தரமுடியாது என்று மறுத்தோம். எங்களது மருமகனிடம் கட்டப் பஞ்சாயத்துப் பேசி 5 லட்ச ரூபாய் பணத்தை பறித்துகொண்டனர். மேலும் ஐந்து லட்ச ரூபாய் இரண்டு ஏக்கர் நிலத்தை தருமாறு கேட்டு எங்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். இதுகுறித்து அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் நாங்கள் புகார் அளித்தும், அவலூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து எங்களை மிரட்டும் கட்டப் பஞ்சாயத்தார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. செய்யாத தவறுக்காக எங்களை தொடர்ந்து மிரட்டி வருபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகவே தற்கொலைக்கு முயன்றோம்” என்றனர் அந்த தம்பதியினர். 

 

இதையடுத்து போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் தம்பதி இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.