Skip to main content

ஜெயலலிதாவிற்காக உயிரைக் கொடுத்த அ.தி.மு.க தொண்டனின் குடும்பம்; கிழிந்த சேலைகளே சுவர்களாய்... நன்றாய் படித்தும் படிக்க வழியில்லாமல் நிற்கிறார்கள்...

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்க முடியவில்லை என்பதை நினைத்தே மாரடைப்பால் மரணம் அடைந்த அ.தி.மு.க வின் உண்மை தொண்டனின் குடும்பம் இன்று சின்ன சின்னக் குழந்தைகளுடன் நாதியற்று நிற்கிறது. 

 

murugan

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40) எலக்ட்ரீசியன். 2015 காலகட்டத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஜெயலலிதா முதலமைச்சர் ஆக முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில் அ.தி.மு.க தொண்டர்கள் பல்வேறு முடிவுகளை எடுத்தனர். அப்படிதான் மே 21 ந் தேதி காலை அதே பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் நடந்த ஜெயலலிதா பற்றிய காரசார விவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் விசுவாசி முருகன் நெஞ்சுவலியால் விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மற்றும் மாஜி ஊராட்சி மன்றத் தலைவர் தயாளன் உள்பட பலரும் முருகனை மீட்டு அருகில் இருந்த அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் முருகன் மரணமடைந்திருந்தார். ஜெயலலிதாவுக்காக உயிரை கொடுத்த முருகனுக்கு அ.தி.மு.க.வினர் அ.தி.மு.க கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

 

murugan

 

கட்சி தலைமை முருகன் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியும், குழந்தைகளின் படிப்பு செலவையும் ஏற்கும் என்று அந்த நேரத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள் சொல்லிச் சென்றுள்ளனர். நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. தற்போது முருகனின் மூத்த மகள் பிளஸ் டூ-வில் 404 மார்க் வாங்கிவிட்டு மேலே படிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து உள்ள 10 வயது இரட்டைக்குழந்தைகள் 6-ம் வகுப்பு போக தயாராக உள்ளனர். கூலி வேலைக்கு செல்லும் தாயால் எதுவும் செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்.
 

இதுகுறித்து முருகனின் மனைவி கூறும்போது, “அம்மா அம்மான்னு உயிரை விடுவார். ஒரு நாள் அம்மா ஜெயலலிதா பதவி ஏற்க முடியாம செய்றாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தவர். கடைக்கு டீ குடிக்க போனார். டீ குடிச்ச கையோட மாரடைப்பு வந்து விழுந்து இறந்துட்டாரு. அ.தி.மு.க.காரங்க வந்து கொடி போர்த்திட்டு ரூ. 3 லட்சம் நிதி வரும்னு சொல்லிட்டு போனாங்க. இதுவரை அவங்களும் வரல. நிதியும் வரல. அம்மாவுக்காக உயிரை விட்டவருக்கு அவங்க கொடுக்க சொன்ன நிதியை கூட கொடுக்கல. 3 சின்னப் பிள்ளைகளை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன். கஜா புயல் வந்தப்ப வீட்டு மேல இருந்த சிமென்ட் சீட் எல்லாம் உடைஞ்சு போச்சு. கொட்டுற மழையில அடிக்கிற காத்துல 4 பேரும் கட்டிபிடிச்சுக்கிட்டு உக்காந்திருந்தோம். 3 மாசம் கழிச்சு ஒரு தொண்டு நிறுவனம் சிமென்ட் சீட் வாங்கி கொடுத்தாங்க. அதை தான் மேல் கூரையா போட்டு சுற்றிலும் கிழிஞ்ச சேலைகளை சுவரா கட்டி வச்சு மழை, வெயில், பனி, காத்துன்னு குழந்தைகளை காப்பாத்தி வச்சிருக்கேன்.

 

murugan


இப்ப மூத்த பொண்ணு கொத்தமங்கலம் அரசு பள்ளியில படிச்சு, பிளஸ் டூ வுல 404 மார்க் வாங்கி இருக்கு. மேல படிக்க வைக்க எந்த வசதியும் இல்லை. நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு மனு போட்டிருக்கு. படிப்பு முடிச்சதும் வேலை கிடைச்சா மற்ற 2 குழந்தைகளின் படிப்புச் செலவை என் மூத்த பொண்ணு கவணிச்சுக்கும். ஆனா எப்படி கிடைக்கப் போகுதுன்னு தெரியல.
 

அ.தி.மு.க அறிவிச்ச அந்த ரூ 3 லட்சத்தை கொடுத்தாலாவது குழந்தைகளை படிக்க வைப்பேன். எதுவும் கிடைக்கல. அ.தி.மு.க - அம்மா-வுக்காக உயிரைக் கொடுத்தவர் குடும்பத்துக்கு அந்த கட்சி செஞ்சது ஒன்றுமே இல்ல” என்று கலங்கினார். குழந்தைகளின் படிப்புக்காக உதவிகள் கிடைத்தால் அது போதும் என்றார். அருகில் நின்ற குழந்தைகள் கண்கலங்கி நின்றனர். அதிகாரப் போட்டியில் இருக்கும் அ.தி.மு.க தலைமை இது போல ஜெயலலிதாவுக்காக உயிரை கொடுத்த உண்மை தொண்டர்களின் குடும்பம் பற்றி அறியவில்லையா? அறிந்தும் கண்டுகொள்ளவில்லையா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.