முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த குமரி மாவட்டம், நாகர்கோவில் வெள்ளாளர் நகர், மேற்குக் காலணியைச் சேர்ந்த விஜயகுமாரை 2004 -ல் மேல்சபை எம்.பி ஆக்கி, அதன்பிறகு, 6 மாதத்தில் ஒருங்கிணைந்த குமரி மாவட்டச் செயலாளராகவும் ஆக்கினார்.
இது ஏற்கனவே குமரி மாவட்டத்தில், கோலோச்சி கொண்டிருந்த தளவாய் சுந்தரம், பச்சைமால் மற்றும் நாஞ்சில் முருகேசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க.வின் முக்கியப் பதவியைக் கைவசம் வைத்திருந்தவர் விஜயகுமார். இவர், தளவாய் சுந்தரம், பச்சைமால் மற்றும் நாஞ்சில் முருகேசனை ஓரங்கட்டி தனக்கென்று ஒரு அணியை அ.தி.மு.க.வில் உருவாக்கினார். இதனால் குமரி மாவட்டத்தில் 4 அணிகளாக அ.தி.மு.க செயல்பட்டது.
இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தளவாய் சுந்தரம் சசிகலாவின் ஆதரவாளராக மாறிய பின்னர், சில மாதங்களுக்குப் பிறகு, டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியைத் தக்கவைப்பதற்காக, எடப்பாடி அணிக்கு மாறினார். இதையடுத்து, குமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரத்தின் கை ஓங்கவே, விஜயகுமாரிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கபட்டது. குமரி கிழக்கு, மேற்காகப் பிரிக்கப்பட்ட பின்னர், தளவாய் சுந்தரம் சுட்டிக்காட்டிய ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணியைச் சோ்ந்த இருவரை, மாவட்டச் செயலாளராக ஆக்கினார்கள். இதனால், விஜயகுமார் அப்செட் ஆகி, அவருடைய ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்பட்டனர்.
இதனால் விஜயகுமார், மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். மேலும், நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆா் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், விஜயகுமாரை மேடையில் ஏற்றவிடாமல் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி கோஷம் போட்டனர். இந்த நிலையில், கடந்த 10 -ஆம் தேதி கரோனா தடுப்பு ஆய்வுப் பணிக்காக, நாகர்கோவில் வந்த எடப்பாடி பழனிசாமியை விஜயகுமார் வந்து சந்திக்கவும் இல்லை, அந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவும் இல்லை. இது அ.தி.மு.க.வினரிடத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை விஜயகுமார் எம்.பி.யின் வீட்டுமுன் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி விட்டுச் சென்றதாக நேசமணி நகர் போலீசுக்கு விஜயகுமாரின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். அப்போது, விஜயகுமார் வீட்டில் இல்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசாரும் வெடிகுண்டு நிபுணா்களும், கியூ பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு வீசியதால் எந்த விதச் சேதமும் ஏற்படவில்லை.
வெடிக்காமல் கிடந்த அந்த வெடிகுண்டை நிபுணர்கள் சோதனை செய்ததில், பிளாஸ்டிக்கால் ஆன உருண்டை வடிவிலான ஐஸ் கிரீம் டப்பாவில் வெடி மருந்தை நிரப்பி அதை யாரோ எறிந்துவிட்டுச் சென்றதாக, போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். மேலும், இது குறித்து போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம், விஜயகுமாரின் உறவினா்களிடத்தில் அதிர்ச்சியை உருவாக்கியிருப்பதோடு அ.தி.மு.க.வினரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.