Skip to main content

அ.தி.மு.க எம்.பி விஜயகுமார் வீட்டுமுன் கிடந்த வெடிகுண்டால் பரபரப்பு...!

Published on 24/11/2020 | Edited on 24/11/2020

 

ADMK MP vijayakumar home kanyakumari


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த குமரி மாவட்டம், நாகர்கோவில் வெள்ளாளர் நகர், மேற்குக் காலணியைச் சேர்ந்த விஜயகுமாரை 2004 -ல் மேல்சபை எம்.பி ஆக்கி, அதன்பிறகு, 6 மாதத்தில் ஒருங்கிணைந்த குமரி மாவட்டச் செயலாளராகவும் ஆக்கினார்.

இது ஏற்கனவே குமரி மாவட்டத்தில், கோலோச்சி கொண்டிருந்த தளவாய் சுந்தரம், பச்சைமால் மற்றும் நாஞ்சில் முருகேசனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அ.தி.மு.க.வின் முக்கியப் பதவியைக் கைவசம் வைத்திருந்தவர் விஜயகுமார். இவர், தளவாய் சுந்தரம், பச்சைமால் மற்றும் நாஞ்சில் முருகேசனை ஓரங்கட்டி தனக்கென்று ஒரு அணியை அ.தி.மு.க.வில் உருவாக்கினார். இதனால் குமரி மாவட்டத்தில் 4 அணிகளாக அ.தி.மு.க செயல்பட்டது.

இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தளவாய் சுந்தரம் சசிகலாவின் ஆதரவாளராக மாறிய பின்னர், சில மாதங்களுக்குப் பிறகு, டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியைத் தக்கவைப்பதற்காக, எடப்பாடி அணிக்கு மாறினார். இதையடுத்து, குமரி மாவட்டத்தில் தளவாய் சுந்தரத்தின் கை ஓங்கவே, விஜயகுமாரிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கபட்டது. குமரி கிழக்கு, மேற்காகப் பிரிக்கப்பட்ட பின்னர், தளவாய் சுந்தரம் சுட்டிக்காட்டிய ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணியைச் சோ்ந்த இருவரை, மாவட்டச் செயலாளராக ஆக்கினார்கள். இதனால், விஜயகுமார் அப்செட் ஆகி, அவருடைய ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்பட்டனர்.

இதனால் விஜயகுமார், மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார். மேலும், நாகர்கோவிலில் நடந்த எம்.ஜி.ஆா் நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், விஜயகுமாரை மேடையில் ஏற்றவிடாமல் தளவாய் சுந்தரத்தின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி கோஷம் போட்டனர். இந்த நிலையில், கடந்த 10 -ஆம் தேதி கரோனா தடுப்பு ஆய்வுப் பணிக்காக, நாகர்கோவில் வந்த எடப்பாடி பழனிசாமியை விஜயகுமார் வந்து சந்திக்கவும் இல்லை, அந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்ளவும் இல்லை. இது அ.தி.மு.க.வினரிடத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை விஜயகுமார் எம்.பி.யின் வீட்டுமுன் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வீசி விட்டுச் சென்றதாக நேசமணி நகர் போலீசுக்கு விஜயகுமாரின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். அப்போது, விஜயகுமார் வீட்டில் இல்லை. இதையடுத்து அங்கு வந்த போலீசாரும் வெடிகுண்டு நிபுணா்களும், கியூ பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு வீசியதால் எந்த விதச் சேதமும் ஏற்படவில்லை. 
 

cnc


வெடிக்காமல் கிடந்த அந்த வெடிகுண்டை நிபுணர்கள் சோதனை செய்ததில், பிளாஸ்டிக்கால் ஆன உருண்டை வடிவிலான  ஐஸ் கிரீம் டப்பாவில் வெடி மருந்தை நிரப்பி அதை யாரோ எறிந்துவிட்டுச் சென்றதாக, போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். மேலும், இது குறித்து போலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம், விஜயகுமாரின் உறவினா்களிடத்தில் அதிர்ச்சியை உருவாக்கியிருப்பதோடு அ.தி.மு.க.வினரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.