அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்து நன்றி கூறினார். கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்குப் பிறகு ஆளுநர்- முதல்வர் சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,
முதல்வர் மனதில் உருவான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. திமுக ஆட்சிக் காலத்தை விட அதிமுக ஆட்சியில் அதிக அளவில் மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் 3,050 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் 300 மருத்துவ இடங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. விரைவில் மருத்துவ கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும். உள் ஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தீர்மானம் கொண்டு வந்ததா? 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வந்தது முழுக்க முழுக்க அதிமுக அரசுதான். இந்த ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதை திமுக எந்தவிதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது என தெரிவித்தார்.