Skip to main content

''அந்த இடத்தில் கொடிக் கம்பமே இல்லை...'' கோவையில் இளம்பெண் விபத்தான வழக்கில் அரசு பதில்

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

கடந்த 12- அம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த விபத்தில் லாரி மோதி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமென உறவினர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இதனிடையே நிலம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ராஜேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இடது கால் அகற்றப்பட்டுள்ளது. 

 

KOVAI INCIDENT... GOVT ANSWER

 

இந்த சம்பவத்திற்கு முன்பே சென்னையில் பள்ளிக்கரணையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் அதிமுக பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில் ட்ராபிக் ராமசாமி கோவையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கூடுதல் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கும் சேர்த்து இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராகி, கோவையில் நடந்த அந்த சம்பவத்தின் நிகழ்விடத்தில் எந்த கொடிக்கம்பமும் இல்லை என விசாரணையில் தெரியவந்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் சுபஸ்ரீ சம்பவத்திற்கு பிறகு விதிமீறி பேனர் வைக்க யாருக்கும் அனுமதி தரவில்லை எனவும் வாதிடப்பட்டார். இதுபோன்று விதிமீறி வைக்கப்படும் பேனர்கள், கொடிக்கம்பங்கள் மூலம் ஏற்படும் விபத்துகளுக்கு ஏன் அந்தந்த கட்சிகளிடம் இருந்தே இழப்பீடு கோரக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் இந்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி ஒத்திவைத்தது.

 

 

சார்ந்த செய்திகள்