Skip to main content

‘’செய்வீர்களா..செய்வீர்களா...’’ஜெ. பாணியில்  பேசிய பிரேமலதா - முகம் சுளித்த அதிமுகவினர்

Published on 04/04/2019 | Edited on 04/04/2019

 

எப்போதுமே தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்டிவைத்திருக்கும் மக்களை பார்த்து" செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா" என்று ஜெயலலிதா கேட்பதுண்டு, அது சாமானிய மக்களிடம் எடுபட்டது. அதே பாணியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிரச்சார வேனில் இருந்தபடி கூட்டத்தினரைப் பார்த்து "வாய்ப்பு தருவீர்களா, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வீர்களா, டெபாசிட் இழக்க செய்வீர்களா, எதிர்கட்சிகளுக்கு நல்ல பாடம் புகட்டுவீர்களா " என்று ஜெ. பாணியில் கேட்டுவருவது ஜெயலலிதா அபிமானிகளை முகம் சுளிக்கவே வைத்தது.

 

p

 

     மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆசைக்கும், நாடாளுமன்ற தொகுதியின்  அதிமுக வேட்பாளர் சரவணனுக்கும் திருவாரூரில் போட்டியிடும் , திருவாரூர் இடைத்தேர்தல் தொகுதியின் அதிமுக வேட்பாளர்  ஜீவானந்தத்திற்கும் ஆதரவாக வாக்கு கேட்டு சிதம்பரம் வழியாக சீர்காழி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட கடைவீதிகளில் பிரச்சாரம் செய்தார் பிரேமலதா.

 

     அவருக்கு சிதம்பரம் கோவிலில் முறையான சாமி தரிசனம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் பேசிய பிரேமலதா,  "இந்த கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களின் ஆதரவு பெற்ற கூட்டணி. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சேர்ந்தாலே ராசியான கூட்டணி என்று 2011 இல் நிரூபிக்கப்பட்டுள்ளது.   இப்போதும் 2011 வெற்றி வரலாறு மீண்டும் திரும்புகிறது. எங்களது கூட்டணி அமைய கூடாது என்று திமுக எத்தனையோ சூழ்ச்சிகளை செய்தது. அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளோம். இந்த கூட்டணி நிச்சயம் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெறும் நாற்பதும் நமதே என்று சொல்லக்கூடிய அளவில் சரித்திரம் படைக்கும்.

 

     துரைமுருகன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையை பார்க்கும் போது திமுக கூட்டணி ஊழல் கூட்டணி என்று மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். மக்கள் விரோத கூட்டணியை மக்கள் புறக்கணித்துவிட்டனர், நீங்கள் செய்வீர்களா "என்பது போலவே பேசி முடித்தார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.