Skip to main content

சித்ராவின் கணவர் ஹேம்நாத்துக்கு ஜாமீன்!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

actress chitra husband chennai high court order

 

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த ஆண்டு டிசம்பர் 9- ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தற்கொலை என வழக்குப் பதிவுசெய்த நசரத்பேட்டை காவல் ஆய்வாளர், அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து, ஹேம்நாத்தைக் கைது செய்தனர்.

 

இந்த வழக்கில், டிசம்பர் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஹேம்நாத் தனது மனுவில் ‘தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது எனக் கூறி, சித்ரா மீது சந்தேகம் கொண்டதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக, எனக்கு எதிராகக் காவல்துறையினர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது. கடந்த ஆகஸ்ட் மாதம், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். என்னுடனும் எனது குடும்பத்தினருடனும் சித்ரா அன்போடு பழகியதை அவரது தாய் விரும்பவில்லை. எனக்கும், சித்ராவுக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. எந்தக் குற்றமும் செய்யாததால், எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். 

actress chitra husband chennai high court order

 

இந்த நிலையில், ஜாமீன் கோரிய ஹேம்நாத்தின் வழக்கு இன்று (15/02/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத்தைக் கைதுசெய்து 60 நாட்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், ஹேம்நாத்துக்கு சட்டப்பூர்வ ஜாமீனை வழங்கிய உயர்நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஹேம்நாத் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை சித்ரா மரண வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

Actress vj Chitra Death Case - Court Order

 

சின்னத்திரை நடிகையான சித்ரா, கடந்த 2020- ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியது. இதனிடையே தனக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார். 

 

ad

 

இந்நிலையில் ஹேம்நாத்தின் மனு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் விசாரணையை விசாரணை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவும் என உத்தரவிட்டுள்ளார். 

 


 

Next Story

நடிகை சித்ராவின் கணவருக்கு வழங்கிய பிணையை ரத்துச் செய்யக்கோரி அவரது நண்பர் மனு! 

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

Actress Chitra's friend Manu wants to cancel the bail given to her husband!

 

சின்னத்திரை நடிகை சித்ரா கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

 

சின்னத்திரை நடிகையான சித்ரா, கடந்த 2020- ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய பிணையை வழங்கியது. இதுபோன்ற சூழலில், ஹேம்நாத்திற்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய வேண்டி, அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

 

அதில், ஹேம்நாத் தனது நீண்ட கால நண்பர் என்பதும், அவர் சித்ராவுக்கு அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறையின் விசாரணையின் போது தான் சாட்சியம் அளித்ததாகவும் ரோஹித் குறிப்பிட்டுள்ளார். நிபந்தனைகளை மீறி ஹேம்நாத் செயல்பட்டு வருவதால், அவரது பிணையை ரத்து செய்ய வேண்டும் என ரோஹித் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

இந்த மனுவை இன்று (20/07/2022) விசாரித்த நீதிபதி ஹேம்நாத், சித்ராவின் தந்தை மற்றும் காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஆகஸ்ட் 10- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.