Skip to main content

’வாத்தியார்’ ஆன விஜய்! ‘சின்னவர்’ ஆன சினேகன்! -காலம் ‘ரொம்பவே’ மாறிவிட்டது!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

‘என் ராஜால்ல.. என் மந்திரில்ல..’ 
-உணவு ஊட்டும்போது  அம்மாக்கள் பிள்ளைகளை இப்படிக் கொஞ்சுவார்கள். 

 

ராஜா, ராணி, இளவரசி, மந்திரி, ராஷ்டிரபதி, கோடீஸ்வரன், தங்கம், வைரம், முத்து என, இந்த உலகத்தில் உயர்வாக மதிக்கப்படும் அடையாளங்களை, பிள்ளைகளுக்கு பெயராகவே சூட்டி அழைப்பதில் பெருமிதம்கொள்ளும் பெற்றோர் உண்டு. 

 

ஆனாலும், இந்தப் பட்டத்துக்கு இவர் ஒருவர் மட்டுமே தகுதியானவர் என, நம் மனதில் உறுதிபட நிலைத்துவிட்ட விஷயங்கள் பல உண்டு. காந்தி ஒருவர் மட்டுமே நமது பார்வையில் 'மகாத்மா' ஆவார். மனிதருள் மாணிக்கம் என்றால், அது 'நேரு'தான். 'கர்மவீரர்' என்றால், அது காமராஜர்தான். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். அதுபோலத்தான், தமிழ்ச் சினிமா உலகில் ‘வாத்தியார்’ என்றாலோ, ‘சின்னவர்’ என்றாலோ, அது எம்.ஜி.ஆர். மட்டும்தான்! அதே நேரத்தில், நாளைய முதல்வர் பட்டத்தை, யாருக்காகவும், யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். அந்த அளவுக்கு ‘நாளைய முதல்வர்’ பட்டம் மலிவாகிவிட்டது.

 

எங்க வீட்டுப் பிள்ளை என்றால் எம்.ஜி.ஆர். நடித்த ஒரு எங்க வீட்டுப் பிள்ளைதான். சிவகார்த்திகேயன் படத்திற்கெல்லாம் அந்த டைட்டிலைத் தர முடியாது என்று கறார் காட்டியதால், சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீட்டுப் பிள்ளை ஆனது. அதே நேரத்தில்  ‘உத்தமபுத்திரன்’ என்ற ஒரே டைட்டிலில். பி.யு.சின்னப்பா, சிவாஜி கணேசன், தனுஷ் ஆகிய மூன்று நடிகர்கள் நடித்துள்ளனர். 

 

சரி, நடப்பு விஷயத்துக்கு வருவோம். நடிகர் விஜய்யை முதலில் 'இளைய தளபதி' என்றார்கள். பிறகு, 'தளபதி' என்றார்கள். 'மாஸ்டர்' திரைப்படத்தில் ‘வாத்தி கமிங் ஒத்து’ என்ற வரிகள் பாடலில் வருவதால், ‘வாத்தி’ என்றார்கள். அதுவே ‘டெவலப்’ ஆகி,  ‘வாத்தியார்’ என்றே, பிறந்தநாள் போஸ்டர் ஒட்டியிருக்கின்றனர். 

 

‘வாங்கய்யா வாத்தியாரய்யா..’ என்று எம்.ஜி.ஆர். நடித்த 'நம்நாடு' திரைப்படத்தில் பாடலே உண்டு. ஏனென்றால், அந்தப் படம் வருவதற்கு முன்பே, ‘வாத்தியார்’ பட்டத்துக்கு அவர் சொந்தக்காரர் ஆகிவிட்டார். சினிமா மூலம் மக்களுக்கு நல்ல கருத்துகளைச் சளைக்காமல் சொல்லி வந்ததால், வாத்தியார் பட்டம் அவருக்கு மிகவும் பொருந்திப் போனது. அதேபோல்தான், ‘சின்னவர்’ பட்டமும், தமிழ்ச் சினிமா உலகில் எம்.ஜி.ஆர். ஒருவருக்கு மட்டுமே உரித்தானது. 

 

http://onelink.to/nknapp

 

‘காலம் மாறினால், எல்லாமே மாறிவிடும்’ எனச் சொல்வதும்,  ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்பதும், நிரூபணமாகியே வருகிறது. அந்த வகையில், தற்போது நடிகர் விஜய் ‘வாத்தியார்’ அவதாரம் எடுத்துள்ளார். பாடலாசிரியரும் நடிகருமான சினேகனை ‘சின்னவர்’ என்கிறார்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியினர். 

 

‘என்னதான் நடக்கட்டும் நடக்கட்டுமே!’ என சகலத்தையும் ஏற்றுக்கொள்ளும், பக்குவ மனநிலையில்தான், மக்களும் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்னிடம் காசில்லை” - விமர்சனங்களுக்கு விஷால் விளக்கம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
vishal about his election cycle issue

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வருகிறது.  

இந்த நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படத்தை புரொமோஷன் செய்யும் பணியில்  ஹரி, விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விஷால் பதிலளித்தார். அவரிடம் ஒரு மாணவன், கடந்த தேர்தலில் விஜய்யை போலவே சைக்கிளில் வந்து வாக்களித்தது தொடர்பாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், “வெற்றி என்பது ஒரு நடிகருக்கு சாதாரண விஷயம் இல்லை. ஆனால் அந்த வெற்றியை அடைவதற்கு ஒரு நடிகர் எவ்வளவு போராட வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும். ஆரம்ப காலகட்டத்தில் விஜய்க்கு நிறைய விமர்சனங்கள் வந்தது. ஒரு பேட்டியில் அவரை பற்றி ரொம்ப கேவலமாக எழுதியிருந்தனர். அது பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அவருடைய தன்னம்பிக்கை மூலம் எல்லார் முன்னாடியும் தளபதியாக இன்று நிற்கிறார். அந்த தன்னம்பிக்கை எனக்கு உந்துதலாக இருக்கிறது. அவருடைய வளர்ச்சியை பார்த்து வளர்ந்த நடிகன் நான்” என்றார். 

vishal about his election cycle issue

மேலும், “சைக்கிளில் போனது அவரை பார்த்து இல்லை. ஆனால் அவர் போனதை பார்த்திருக்கிறேன். அவர் மாதிரி போக வேண்டும் என்ற யோசனை கிடையாது. என்னிடம் வண்டி இல்லை. அப்பா, அம்மாவிற்கு ஒரு வண்டி இருக்கிறது. மீதி வண்டியெல்லாம் விற்றுவிட்டேன். இன்றைக்கு இருக்கும் ரோடு கண்டிஷனில் சஸ்பென்சன்லாம் மாத்த முடியாது. என்னிடம் காசில்லை. அதனால் சைக்கிள் வாங்கினால், ட்ராஃபிக் இல்லாமல் ஈஸியாக சென்றுவிடலாம்” என்றார்.  

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.