Skip to main content

“ஆங்கிலத்தில் பேசச்சொல்ல நீங்கள் யார்?” - துணை ராணுவ வீரரின் வைரல் வீடியோ

Published on 30/12/2022 | Edited on 30/12/2022

 

actor siddharth madurai airport issue crpf viral video

 

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான சித்தார்த் அவ்வப்போது சமூகப் பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.

 

இந்நிலையில், நடிகர் சித்தார்த், மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி 'சிஐஎஸ்எஃப்’ (CISF) அதிகாரிகள் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவில், "மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். அவர்கள் வயதான என் பெற்றோரிடம் பையிலிருக்கும் நாணயங்களை வெளியே எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் இந்தியில் தொடர்ந்து எங்களிடம் பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னேன். ஆனாலும் இந்தியில் பேசியபடியே இருந்ததற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் எனத் திமிராகப் பதிலளித்தார்கள். வேலையில்லாத மக்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்" எனக் காட்டமாகக் குறிப்பிட்டு இருந்தார்.

 

இந்நிலையில், துணை ராணுவ வீரர் ஒருவர் இது குறித்து பேசிய காணொலி தற்போது வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள காணொலி ஒன்றில் "இந்திய துணை ராணுவ வீரர்களை ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? நாங்கள் ஏன் உங்களிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும். நாங்கள் என்ன பிரிட்டிஷ்காரர்களா. இந்திய மொழியில் ஏதாவது ஒரு மொழியில் பேசச் சொல்லுங்கள், பேசுகிறோம். தமிழில் பேசுங்கள் அங்குக் கண்டிப்பாக ஒருத்தங்க இருப்பாங்க. எனக்கு தெலுங்கு தெரியும்னு சொல்லிட்டு, தெலுங்குல பேசுங்கள், கண்டிப்பாக  பேசுவாங்க. வெள்ளைக்காரர்களே இங்கு வந்து ஹிந்தி கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

 

உங்கள் பெற்றோர் பையில் இருந்த சில்லறை காசுகளை எடுக்க சொன்னாங்கனு சொன்னதை எந்த மொழியில் சொன்னார்கள் .நீங்கள் அதை எப்படிப் புரிந்து கொண்டீர்கள். சைகை மொழியில் சொன்னார்களா? வேலை இல்லாதவர்கள் ரொம்ப துன்புறுத்துகிறார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். திரையுலகில் நீங்கள் செய்த சில்மிஷம் எல்லாம் எங்களுக்கு தெரியும். டூட்டி பார்ப்பவர்களிடம் கண்ணியமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். அரை மணி நேரம் இல்லை, ரெண்டு மணி நேரம் சந்தேகத்தில் நிற்க வைத்தாலும் நின்று தான் ஆக வேண்டும். ஒரு எட்டு நடந்து போக முடியாது. நாங்கள் டூட்டி பாக்குற இடத்துல எங்களுக்கு தான் பவர். எதுக்கு எடுத்தாலும் கும்பிடு போட்டுட்டு போறதுக்கு அரசியல்வாதி இல்லை நாங்க. புரிஞ்சுக்கோங்க" என்று பேசியுள்ளார். (துணை ராணுவ வீரர் ஒருமையில் பேசி உள்ளதை நாகரிகம் கருதி இங்கு பன்மையில் வெளியிட்டு உள்ளோம்).

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.