Skip to main content

“தவறு செய்யும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை” - எச்சரித்த சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Published on 30/05/2022 | Edited on 30/05/2022

 

"Action against erring doctors" - Health Secretary Radhakrishnan

 

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், புதியதாக அமைக்கப்பட்டுவரும் உயர்தர தீவிர சிகிச்சைப் பிரிவின் இ.சி.ஆர்.பி வார்டுகளைப் பார்வையிட்டார். இந்த வார்டில் ஒவ்வொரு படுக்கையும் தலா 2.90 இலட்சம் மதிப்பில் மொத்தம் 32 படுக்கைகள் அமைத்துள்ளன. இந்த வார்டில் அமையவுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ வசதிகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தப் பிரிவில் 32 படுக்கைகளில் 20 படுக்கைகள் பெரியவர்களுக்கும், 12 படுக்கைகள் சிறுவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் அனைத்து நோய்களும் கட்டுப்பாட்டில் உள்ளதோடு, தொடர் கண்காணிப்பு பணியும் நடைபெற்றுவருகிறது. மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகியவற்றை விட தமிழகத்தில் நோய் தொற்று 22 என்ற அளவில் மிகக்குறைவாக பதிவாகி வந்தது. தற்போது 50 வரை உயரத் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் தற்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனாலும் இறப்பு மிகமிக குறைவாக உள்ளது.

 

தொடர்ந்து மருத்துவமனைக்கு வராத மருத்துவர்களைக் கண்காணிக்க மாவட்டம் தோறும் அறிவுறுத்தி உள்ளோம். சில குறைபாடுகள் எங்கள் கவனத்திற்கு வருகிறது. தவறு செய்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல நாட்களுக்குப் பின்பு பள்ளிகள் தற்போதுதான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரும்போது அவர்களின் மனநிலை சீராக மாறிவிடும். 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லுாரி இல்லை. தமிழக அரசின் கொள்கையின் அடிப்படையில், பெரம்பலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கல்லுாரி அனுமதி கிடைத்துவிட்டால், இந்தியாவிலேயே அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லுாரி உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிடும்” என்று தெரிவித்தார்.

 

இந்த ஆய்வில் அரசு மருத்துவமனை டீன் வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.