கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பு.மாம்பாக்கம் கிராமத்தில் வீடு கட்டும் பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன்குமார் மற்றும் அமீர் சைனி ஆகியோர் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், பவன்குமார் என்பவரின் உடல் அழுகிய நிலையில் புதைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் சந்தேகமரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே பவன் குமாருடன் வேலை செய்து வந்த அமீர் சைனி என்பவர் தலைமறைவாகிவிட்டார்.
இந்த நிலையில் அமீர் சைனியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், (பொறுப்பு) அவர்கள் தனிப்படை அமைத்து குற்றவாளியை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி உளுந்தூர்பேட்டை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் திருமால் தலைமையில் உளுந்தூர்பேட்டை உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், காவலர்கள் மணிகண்டபெருமாள், மதுரைவீரன், ரமேஷ், ராஜா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் காவல்துறை தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
அமீர் சைனி(30) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் போது இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான வாக்குவாதம் ஏற்பட்டதில் கோபம் ஏற்பட்டு பவன்குமாரை கத்தியால் குத்தி வீட்டின் முன்பு புதைத்தது தெரியவந்தது.
இதையடுத்து அமீர் சைனி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து உரிய விசாரனைக்கு பின் அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைப்பட்டார். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளியைக் கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.