Skip to main content

சேலம் அருகே கோர விபத்து; நேபாள சுற்றுலா பயணிகள் 6 பேர் பரிதாப பலி! 26 பேர் பலத்த காயம்!!

Published on 20/02/2020 | Edited on 21/02/2020

சேலம் அருகே, இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நேபாள நாட்டினர் சென்ற மினி பேருந்து மீது தனியார் சொகுசுப்பேருந்து மோதிய விபத்தில் நேபாள நாட்டினர் 6 பேர் பரிதாபமாக பலியாயினர். 26 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவைச் சேர்ந்த 32 பேர் இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக கடந்த பத்து நாள்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தனர். இந்தியாவில் முக்கிய கோயில்கள், சுற்றுலாத்தலங்ளை பார்க்க வசதியாக மினி பேருந்தை ஏற்பாடு செய்து, அதில் சுற்றுலா சென்று வந்தனர்.

 

Accident near Salem

 

காத்மாண்டுவைச் சேர்ந்த கவுல்ராம் சவுதாரி, பேருந்தை ஓட்டி வந்தனர். அவருக்கு உதவி ஓட்டுநராக இட்டோடி கத்தாரி என்பவர் செயல்பட்டார். ஒருவர் சோர்வு அடையும்போது மற்றொருவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை (பிப். 19) கன்னியாகுமரிக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து ராஜஸ்தான் செல்வதற்காக சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நரிப்பள்ளம் என்ற இடம் வந்தபோது, அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான தங்கு மண்டபத்தை பார்த்தனர். அப்போது நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டதால், அந்த மண்டபத்தில் இரவு தங்கி விட்டு அதிகாலையில் பயணத்தைத் தொடரலாம் என முடிவு செய்திருந்தனர்.

இதையடுத்து, அந்த பேருந்தை மண்டபத்தை நோக்கி செல்வதற்காக சாலையின் இடதுபுறத்தில் இருந்து வலதுபக்கத்திற்கு ஓட்டுநர் கவுல்ராம் சவுதாரி திருப்பினார். அப்போது பெங்களூருவில் இருந்து கேரளா சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து (ஆம்னி) ஒன்று, நேபாள நாட்டினர் சென்ற மினி பேருந்து மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில், நேபாள சுற்றுலா பயணிகள் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓமலூர் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். 108 ஆம்புலன்ஸ், தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நால்வரின் சடலங்களும் உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு சுற்றுலா பயணிகள் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.


காவல்துறை விசாரணையில், உயிரிழந்தவர்கள், நேபாள நாட்டைச் சேர்ந்த பீர்பதூர் ராய், டீகாராம், கோபால் தமன், போதினி, புல்கரி சவுத்திரி, விஷ்ணு தங்கல் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், காணி சவ்த்ரி (50), மவைதி (40), ரேணுகா கோபால் (70), பூசார் சவுத்ரி (55), பீம்லா சவுத்ரி (52) ஆகியோருக்கு கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இவர்கள் உள்பட பலத்த காயம் அடைந்த 26 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து இந்தியாவில் உள்ள நேபாள நாட்டு தூதரகம் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.