Skip to main content

குடும்ப அட்டை பெற ரூ.500 லஞ்சம் பெற்ற ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது!!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

accepting Rs 500 bribe to get family card

 

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை பெற ரூ.500 லஞ்சம் பெற்ற ஒரு ஊழியர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் உடையார்குடியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் ஹாஜா மொய்தீன் என்பவர் குடும்ப அட்டை கோரி கடந்த 10 தினங்களுக்கு முன்பு இணையதள வழியாக விண்ணப்பித்துள்ளார். புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்காமல் வட்ட வழங்கல் துறை வேலை செய்யும் வருவாய் உதவியாளர் மணிமாறன் ( 58) மற்றும் அதே பிரிவில் அதிகாரியின் அனுமதி இல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இடைத்தரகராக வேலை செய்யும் வீராண நல்லூரைச் சேர்ந்த சாமிதுரை மகன் ராஜசேகர்(49)  ஆகிய இருவரும் செல்போனில் ஹாஜா மொய்தீனிடம்  தொடர்பு கொண்டு புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் வழங்க ரூ 500 பணம் வேண்டும் என கேட்டுள்ளனர்.

 

ஹாஜாமொய்தீன் செல்போனில் அவர்கள் பேசியதை பதிவு செய்து கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அனுப்பினார்.  இதனடிப்படையில் ஊழல் தடுப்பு காவல்துறையின் அறிவுரையின் பேரில் ஹாஜா மொய்தீன் வெள்ளிக்கிழமை மதியம் வட்ட வழங்கல் பிரிவுக்கு சென்று அங்கு இடைத்தரகராக இருந்த  ராஜசேகர் என்பவரிடம் புதிய குடும்ப அட்டை பெற ரசாயன பவுடர் தடவிய ரூ. 500-ஐ லஞ்சமாக கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை ராஜசேகர் வாங்கி அருகில் இந்த வருவாய் உதவியாளர் மணிமாறன் என்பவரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த கடலூர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர்  மெல்வின் ராஜ் சிங் தலைமையில் ஆய்வாளர் மாலா மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கரோனா பரிசோதனைக்கு பிறகு வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1,400 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்; இருவர் கைது

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
1,400 kg ration rice smuggling; two arrested

திருச்சியில் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில், திருச்சி மாவட்டத்தில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட ரோந்து மற்றும் வாகன சோதனையின்போது, திருச்சி தென்னூர் ரங்கநாதபுரம் ஆபீஸர்ஸ் காலனி அருகே நான்கு சக்கர வாகனத்தில் ரேசன் அரிசி மூட்டைகளை சிலர் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நிகழ்விடம் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில், இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு வந்த ரேஷன் அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் தென்னூர் குத்பிஷா நகரைச்சேர்ந்த ப.அப்துல் சுக்கூர் (33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஹ.சதாம் உசேன் (32) என்பதும், ரேஷன் அரிசியை பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதும், அந்த வகையில் விற்பனைக்காக அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1,400 கிலோ அரிசி, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.