மதுரையில் சக ஆசிரியையின் வீட்டில் ஆசிரியை ஒருவர் மூன்று லட்சம் மதிப்புடைய நகையைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சங்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில் நாயகி. இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், அவருடன் ஒன்பது ஆண்டுகளாக உடன் பணியாற்றி வந்த ரெஜினா பேகம் என்பவர் செந்தில்நாயகி வீட்டிற்கு உதவிக்காக வாங்கியிருந்த லேப்டாப்பை மீண்டும் ஒப்படைக்கச் சென்றுள்ளார்.
அப்போது ரெஜினா பேகம் வீட்டின் பீரோவிலிருந்த 9 சவரன் நகையை எடுத்துக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. நகை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த செந்தில் நாயகி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ரெஜினா பேகத்திடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். 9 ஆண்டுகள் உடன் பணியாற்றி வந்த சக ஊழியரின் வீட்டில் ஆசிரியை திருட்டில் ஈடுபட்டுக் கைதுசெய்யப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.