Skip to main content

விபத்தில் பெற்றோரை இழந்த அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

75 thousand rupees for government school children who lost their parents in an accident!

 

விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது. 

 

பொருளாதார வசதியின்றி ஒரு குழந்தை படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகவும், முழுமையான பள்ளிக்கல்வியை நிறைவுசெய்ய வேண்டும் என்ற நோக்கிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. இவற்றில், தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களுக்கு உச்சபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நீண்டகாலமாக செயல்படுத்திவருகிறது. 

 

வருவாய் ஈட்டி வந்த தந்தை அல்லது தாய் ஆகியோரில் ஒருவரோ அல்லது இருவருமோ விபத்தில் உயிரிழந்திருந்தாலோ அல்லது அவர்களால் இனி பொருளீட்ட முடியாது என்ற அளவுக்கு உடல் உறுப்புகள் நிரந்தர முடக்கமாகி இருந்தாலோ அவர்களின் பிள்ளைகள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற முடியும். ஒருமுறை மட்டுமே இத்தொகை வழங்கப்படும்.

 

இந்தக் கல்வி உதவித்திட்டத்திற்கான முதல் அரசாணை (நிலை) எண். 39, நாள்: 30.03.2005. கடந்த 2005ஆம் ஆண்டுதான் முதன்முதலில் இத்திட்டம் அமலுக்கு வந்தது. அப்போது இத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. 

 

பின்னர் கடந்த 27.11.2014 அன்று மேற்சொன்ன அரசாணை திருத்தப்பட்டு, புதிய அரசாணை (நிலை) எண். 195 வெளியிடப்பட்டது. இந்தப் புதிய ஆணையின்படி, வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித்தொகை 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. 

 

இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற முடியும். 

 

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக ரொக்கமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. தகுதி உள்ள மாணவர்களின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி கழகத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத்தொகையைக் கொண்டு அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்புச் செலவினங்களுக்காக பயன்படுத்தப்படும். 

 

வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் அல்லது இருவரையும் விபத்தில் இழந்த அல்லது அவர்களுக்கு நிரந்தர முடக்கம் ஏற்பட்டிருந்தாலோ அத்தகைய பெற்றோரின் பிள்ளைகள் அவரவர் படித்துவரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்கலாம். 

 

மேலும் விவரங்களுக்கு அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அல்லது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.