500 liters of liquor seized; Two arrested

அண்மையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கள்ளச்சாராய ஒழிப்பை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அதன்படி கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார், கடலூர் முதுநகர் அருகே உள்ள கொடிக்கால் குப்பம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் 10 சாராய பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் அந்த சாராய பாக்கெட்டுகளை புதுச்சேரி மாநிலம் ஆராய்ச்சி குப்பத்தில் உள்ள ஒரு சாராயக்கடையில் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையிலான போலீசார் இளங்கோவன் கூறிய சாராயக் கடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த சாராயக்கடையில் சட்டவிரோதமாக ஏராளமான சாராய பாக்கெட்டுகளும், புதுச்சேரி மாநில அரசு சீல் இல்லாத சாராய பாட்டில்களும் இருந்தது தெரிய வந்தது.

Advertisment

இதையடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்டுகளையும் நூற்றுக்கும் மேற்பட்ட சாராய பாட்டில்களையும் போலீசார் அங்கிருந்து பறிமுதல் செய்தனர். இதில் சுமார் 500 லிட்டர் சாராயம் இருந்துள்ளது. சாராயத்தின் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து சாராயம் விற்பனை செய்ததாக கொடிக்கால் குப்பத்தை சேர்ந்த இளங்கோவன் (49) என்பவரையும், ஆராய்ச்சி குப்பத்தில் சாராயம் விற்பனை செய்த புதுச்சேரியை சேர்ந்த அருள் பிரகாஷ் (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சாராய விற்பனையில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.