Skip to main content

5 ஆயிரம் பேர் நடத்திய மொய்விருந்து!! 500 கோடிவரை வசூல்!!

Published on 15/08/2018 | Edited on 27/08/2018


கீரமங்கலம், வடகாடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக கலைகட்டிய மொய்விருந்து முடிந்தது. சுமார் 5 ஆயிரம் பேர் நடத்திய மொய்விருந்தில் ரூ. 500 கோடி வரை வசூல் நடந்துள்ளது.


கீரமங்கலம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக கலைகட்டியிருந்த மொய் விருந்து முடிந்தது. சுமார் 5 ஆயிரம் பேர்கள் நடத்திய மொய்விருந்தில் ரூ. 500 கோடி வரை வசூல் நடந்துள்ளது. 

 

MOI

 

 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, பனங்குளம், குளமங்கலம், செரியலூர், அணவயல், மேற்பனைக்காடு, நெய்வத்தளி, கறம்பக்காடு, பெரியா@ர் சேந்தன்குடி, நகரம் மற்றும் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளாக ஆடிமாதம் நடத்தப்படும் மொய் விருந்து இந்த ஆண்டும் ஆடி முதல் நாளில் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலும் சுமார் 100 பேர்கள் வரை மொய் விருந்து நடத்தினார்கள். ஆட்டுக்கறி விருந்து கொடுத்து மொய் வசூல் செய்யப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் இதற்கு முன்பு செய்த மொய்யின் அளவில்  கோடிக்கணக்கில் பணப்புழக்கம் இருந்தது. இதில் வடகாடு கிராமத்தில் மட்டும் சில தனி நபர்கள் ரூ. 5 கோடி வரை மொய் வாங்கினார்கள்.
    

மொய் விருந்து வைப்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் கீரமங்கலம் வடகாடு சுற்றுவட்டாரக கிராமங்களில் ஆடி மாதத்தில் மொய் விருந்து நடத்தியவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் வரை இருக்கும். அதில் ரூ. 500 கோடிகள் வரை மொய் வசூல் நடந்துள்ளது. இந்த நிலையில் வடகாடு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே மொய் விருந்துகள் முடிந்துவிட்டது. கீரமங்கலம் பகுதியில் ஆடி மாதத்தின் இறுதி நாட்களான 30-ந் தேதியுடன் மொய் விருந்து முடிந்துவிட்டது. இனிமேல் கீரமங்கலம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தனியாக மொய்விருந்து நடத்தப்படமாட்டாது. அடுத்த ஆண்டுதான் மொய் விருந்து நடத்தப்படும். 

 

MOI


    

 

 

இதுவரை மொய் எழுதுவதற்கு என்று எழுத்தர்கள் உள்ளனர். ஆனால் இந்த ஆண்டு புதுமையாக கணினியில் மொய் பதிவு செய்யப்பட்டது. 

மொய் விருந்து குறித்து பொதுமக்கள் கூறும் போது.. மொய்  என்பது கீரமங்கலம் பகுதியில் காலங்காலமாக இருந்துள்ளது. அதாவது கல்யாணம், காதணி விழாவில் மட்டுமின்றி துக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள் ரூ. 1 முதல் ரூ. 5 வரை மொய் எழுதி உள்ளனர். அதாவது விழா வீட்டாரின் கடன் சுமையை குறைக்க உறவினர்கள் அவர்களால் இயன்ற உதவி செய்வதே மொய் என்று இருந்தது. 


ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பு பேராவூரணி பக்கம் மொய் விருந்து கலாச்சாரம் தொடங்கி கீரமங்கலம் பகுதி கிராமங்களிலும் பரவியதால் தற்போது ஆலங்குடி வரை உள்ள கிராமங்களிலும் பரவியுள்ளது. சிறு சிறு தொகையை உறவினர் கடன் கொடுத்துவிட்டு அடுத்த 5 ஆண்டுகளில் அந்த கடனை திரும்ப பெற்றுக் கொள்வதே மொய் விருந்தாக உள்ளது. விவசாயிகள் மொய் விருந்து வசூல் பணத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளனர். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை பெருக்கி உள்ளனர். ஆனால் வட்டிக்கு கடன் வாங்கி மொய் செய்தவர்கள் சிலர் நொடித்து போய் உள்ளனர். மேலும் கடந்த சில ஆண்டுகளாக மொய் வாங்கியவர்கள் இனிமேல் தொடர நினைக்காமல் மொய்யை துண்டித்தும் வருகின்றனர். தற்போது கீரமங்கலம், வடகாடு பகுதியில் சுமார் 25 சதவீதம் பேய் மொய் ரத்து செய்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மொய் ரத்து செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்