Skip to main content

‘குவைத்தில் 5 தமிழர்கள் உயிரிழப்பு?’ - அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
5 Tamils ​​lost their lives in Kuwait? Minister Senji Mastan informed

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த கட்டடத்திலிருந்த 195 பேரில் 175 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வெளியானது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் தான் இந்தத் தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். முன்னதாக குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் என்பவரின் நிலை குறித்தும் தெரியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவர் அங்குள்ள தரக் கட்டுப்பாட்டு அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
 

5 Tamils ​​lost their lives in Kuwait? Minister Senji Mastan informed

இந்நிலையில் தீ விபத்து சம்பவம் தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். சென்னையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தீ விபத்து சம்பவம் குறித்து முதலமைச்சருக்கு விளக்கினார். இந்தத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

5 Tamils ​​lost their lives in Kuwait? Minister Senji Mastan informed

அதனைத் தொடர்ந்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்திய தூதரகம் மூலம் உயிரிழப்பு நிலவரம் அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை. அதே சமயம் தமிழ்ச் சங்கம் மூலம் விவரம் சேகரிக்கப்பட்டது. அதன்படி இந்தத் தீ விபத்தில் கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகம்மது ஷரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகிய 5 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர் என அங்குள்ள தமிழ்ச்சங்கங்கள் கூறியுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்