Skip to main content

குடும்பத்தையே பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்; 4 பேர் பலி 

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

4 passed away in fire in Cuddalore

 

கடலூர் செல்லாங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் பிரகாஷ் - தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு ஹாசினி என்ற 8 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. தமிழரசியின் அக்காள் தனலட்சுமி. இவரது கணவர் சற்குரு. கணவர் சற்குருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி தனது 4 மாத கைக்குழந்தை லட்சனுடன் தங்கை தமிழரசி இல்லத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் வந்துள்ளார்.

 

இந்நிலையில் தமிழரசியின் வீட்டிற்கு வந்த தனலட்சுமியின் கணவர் சற்குரு, மனைவியுடன் மீண்டும் சண்டையில் ஈடுபட்டு குடும்பத்தை தீர்த்து கட்டும் நோக்கில் கைக்குழந்தையுடன் சேர்த்து அவர்கள் அனைவரின் மீதும் பெட்ரோலை ஊற்றியுள்ளார். இதை தடுக்கச் சென்ற தமிழரசி மற்றும் அவரது 8 மாத கைக்குழந்தை ஹாசினி உள்ளிட்டோர் மீதும் கொலை செய்யும் நோக்கில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்த  சற்குரு தானும் இந்த தீயில் சிக்கி கருகினார்.

 

தமிழரசியையும், தனலட்சுமியையும் தீயில் இருந்து காப்பாற்ற வந்த சற்குருவின் தாய் செல்வி ஓடிவந்து அணைத்துக் கொண்டதால் செல்வியும் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் தமிழரசி மற்றும் அவரது எட்டு மாத பெண் குழந்தை ஹாசினி, தனலட்சுமியின் நான்கு மாத ஆண் குழந்தை லட்ஷன் என இரண்டு பச்சிளம் குழந்தைகள் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியான நிலையில் படுகாயம் அடைந்த தனலட்சுமி, சற்குருவின் தாயார் செல்வி, சற்குரு ஆகிய மூன்று பேரும் படுகாயங்களுடன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் குடும்பத்தையே தீவைத்து கொல்ல முயன்ற சற்குருவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

 

சம்பவம் பற்றி கடலூர் புதுநகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து முதல் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.  காவல்துறையினர் விசாரணை முடிவில் நடந்த சம்பவம் குறித்த உரிய காரணம் முழுவதுமாக தெரியவரும். குடும்பத் தகராறு காரணமாக பச்சிளம் குழந்தைகளுடன் ஒட்டுமொத்த குடும்பத்தையே கொலை செய்யும் நோக்கில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்