Skip to main content

'30 ஆண்டு கால சேவைக்கான பலன் 2026ல் கிடைக்கும்'-புஸ்ஸி ஆனந்த் பேச்சு 

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 '30 Years of Service Benefit Available in 2026'-Bussi Anand Speech

கடந்த 30 ஆண்டுகளாக செய்து வந்த மக்கள் சேவைக்கான பலன், 2026 ம் ஆண்டு தேர்தலில்  கண்டிப்பாக கிடைக்கும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட அலுவலகத்தின் திறப்பு விழா கருங்கல்பாளையம் அருகில் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பேக் (Bag) உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், 'தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், மிக சிறந்த செயல்பாடுகள் கொண்ட மாவட்டம் ஈரோடு மாவட்டம் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் 3 அலுவலகத்தை ஈரோட்டில் திறந்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கூட, இதுபோன்ற ஒரு கூட்டத்தைக் கூட்டுவதற்கு பல்வேறு பிரச்சனைகளுடன் சேர்த்து குறைந்தது 15 நாட்களாவது ஆகும். ஆனால் இன்று விஜய் என்ற ஒற்றை பெயருக்காக இளைஞர்கள் உட்பட அனைத்து மக்களும் திரண்டு வந்துள்ளனர்''என்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், ''தலைவர் விஜய்யின் அறிவுரைப்படி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு பணிகள் செய்து வருகிறோம்.விஜய் எப்போது மக்களை சந்திப்பார் என்பது குறித்து முறையாக அறிவிப்பு வரும். தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து விஜய்யே அறிவிப்பார். மாநாட்டு நடைபெறுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் சேவை பணி செய்து வருவதால், வரும் 2026 ம் ஆண்டு தேர்தலில் சேவைக்கு உண்டான பலன் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“எம்.ஜி.ஆர் போல் விஜய்யும் மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார்” - செல்லூர் ராஜூ

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Sellur Raju says Like MGR, Vijay also wants to help people

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அ.தி.மு.க, தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதற்கிடையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்தார். இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தான் பிரதான இலக்கு என்றும், ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (18-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், த.வெ.க தலைவர் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவர் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது அவருடைய நோக்கம். தனிப்பட்ட முறையில் ஒரு இளைஞர் (விஜய்) எம்.ஜி.ஆர் போல் தான் சம்பாரித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவ நினைக்கிறார். அவர் களத்திற்கு வந்த அவருடைய கொள்கை, செயல்பாடு உள்ளிட்டவையெல்லாம் முதலில் சொல்லட்டும். எப்போதுமே அதிமுக யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை வச்சுக்காது. அவர் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்” என்று கூறிச் சென்றார். 

Next Story

‘விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிலைப்பாடு என்ன?’- த.வெ.க தலைவர் விஜய் அறிவிப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
T.V.K. leader Vijay's announcement What is the stand on the Vikravandi by-election?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில்தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே. எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்துத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். கழகத் தலைவர், விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக் கழக உள்கட்டமைப்பு சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக, வருகிற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.