Skip to main content

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

3 tier police security at counting centers!

 

சேலம் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண 4 இடங்களில் மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான ராமன் கூறியதாவது:

 

“தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 6ஆம் தேதி நடந்தது. மாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி (தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு நான்கு அமைவிடங்களில் 11 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில், வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

 

அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளின் பொது பார்வையாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் ஆகியோர் ஆய்வு செய்வதற்கு வசதியாக வாக்கு எண்ணும் மையங்களில் தனியாக கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிக்க வசதியாக எல்இடி டி.வி.க்களும் பொருத்தப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கே ஓமலூர், மேட்டூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

 

சேலம் அம்மாபேட்டை கணேஷ் கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஏற்காடு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள ஸ்ரீ மாருதி கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள ஸ்ரீ மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

 

சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள சுவாமி விவேகானந்தா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எடப்பாடி, சங்ககிரி ஆகிய 2 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. 

 

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் உள்ளூர் காவல்துறையினர், சிறப்பு காவல் படையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாநகர காவல்துறை ஆணையர், எஸ்பி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் எப்போது வேண்டுமானாலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யலாம். ஆய்வு செய்வோர், தங்கள் வருகையை உரிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 

 

மேலும், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் அளவிலான நிர்வாக நடுவர்கள் அமர்த்தப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் இரண்டாம் அடுக்கு பாதுகாப்புப் பணியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் தீத்தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.”  இவ்வாறு ஆட்சியர் ராமன் கூறினார்.

 

முன்னதாக அவர் சங்ககிரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், சங்ககிரி சட்டமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் வேடியப்பன், எடப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே!'-மோடி அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
nn

'தூர்தர்ஷனை காவிமயமாக்காதே' என பாஜக அரசுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் கண்டனம் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் மருத்துவர் த. அறம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஒளிபரப்பு நிறுவனம்  தூர்தர்ஷன். சமீபத்தில் அதன் இலச்சினையின் நிறம் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் பொதிகை என்பதை சமீபத்தில் 'டிடி தமிழ்' என்று மாற்றிய தூர்தர்ஷன் நிறுவனம், அதனுடைய இலச்சினையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளது.

இந்தியா முழுவதும் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் காவி நிறம் என்பது ஒரு கட்சியின் அடையாளமாக இருக்கும்போது, இந்த நிறம் மாற்றம் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. அந்தக் கட்சிக்காக அரசு தொலைக்காட்சி நிறுவனமே கட்டணம் இல்லாமல் பிரச்சாரம் செய்கிறதா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளது.

தூர்தர்ஷன் மேலதிகாரிகள் இந்த நிறமாற்றம் காவிநிறமல்ல, ஆரஞ்சு நிறம் என விளக்கம் அளித்துள்ளனர்.ஏன் இந்த நிறமாற்றம் தேர்தல் நடைபெறும் போது செய்தார்கள்? அதற்கான அவசரத் தேவை என்ன வந்தது இப்போது? இது அந்தக் கட்சிக்கான அரசியல் ஆதாயத்திற்கானது என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

சமீபத்தில் ஏப்ரல் 5 அன்று இரவு 8 மணி மணிக்கு 'கேரள ஸ்டோரி' படத்தை அரசு நிறுவனமான தூர்தர்ஷன் ஒளிபரப்பியது மிகுந்த சர்ச்சையை உண்டு பண்ணியது. கேரள முதல்வர் வேண்டுகோளையும் மீறி இது ஒளிபரப்பப்பட்டது.

ஒரு மதப் பிரிவினரை, ஒரு மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது, எவ்வாறு ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தேர்தல் நேரத்தில் அதை ஒளிபரப்பு செய்யலாம்?

தேர்தல் நேரத்தில் மத மோதலை உண்டு பண்ண ஒரு அரசு தொலைக்காட்சி நிறுவனமே தூண்டியதாகவே கருத வேண்டியுள்ளது.

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் ஏன் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறது? தேர்தல் ஆணையம் இருக்கிறதா? என்ற கேள்விகள் எல்லாம் இந்திய மக்களின் மனங்களில் எழுந்துள்ளது.

எனவே உடனடியாக தேர்தல் ஆணையம் தூர்தர்ஷன் இலச்சினை கலர் மாற்றத்தை ரத்து செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக்கொள்கிறது' என்று கூறப்பட்டுள்ளது.