Skip to main content

கோடை விடுமுறை; ஊர் திரும்பியபோது மூவர் பலி!

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

3 passed away car accident in Walajapet

 

சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திருமால். வேலூர் விரிஞ்சிபுரத்தில் உறவினர் வீட்டில் நடைபெற்ற காரிய நிகழ்வில் பங்கேற்று விட்டு மீண்டும் சென்னைக்கு காரில் திரும்பியுள்ளார். சரியாக வாலாஜாப்பேட்டை அடுத்த குடிமல்லூர் அருகே மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலை ஓரத்தில் கிரீஸ் அடிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்கானது. இந்த விபத்தில் திருமால், அவரது சகோதரி எழிலரசி மற்றும் ஓட்டுநர் அஜய் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

 

மேலும் காரிலிருந்த ஒரு சிறுவன் மற்றும் இரு சிறுமிகள் உடலில் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், உயிரிழந்த மூவரின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்த விபத்து சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த திருமால் வேலூர் விரிஞ்சிபுரத்தில் உள்ள தனது அக்கா எழிலரசி வீட்டில் கோடை விடுமுறையை கழித்து விட்டு திருமாலின் ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பிள்ளைகளான தருண், தரணிகா, தனுஷ்கா, அக்கா எழிலரசி, திருமால் மற்றும் ஓட்டுநர் உட்பட 6 பேர் காரில் சென்னை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது வாலாஜா அருகே முன்னே சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது