Skip to main content

10 மாதங்களில் 2.9 கோடி ரூபாய் திருட்டு பொருட்கள் மீட்பு... காவல்துறை அதிரடி...

Published on 03/11/2021 | Edited on 03/11/2021
2.9 crore stolen goods recovered in 10 months ... Police action

 

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைவர் ராமமூர்த்தி இன்று (03.11.2021) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த அக்டோபர் மாதம் வரையிலான திருட்டு வழக்குகளில் சுமார் 2 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, 40 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 52 ரவுடிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 121 ரவுடிகள் மீது 110ன்படி நன்னடத்தை முறையும் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

இந்த ஆண்டில் 5,78,490 வழக்குகள் பதிவுசெய்து 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அபராத தொகை பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 4,06,438 வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 2,43,89,600 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு போக்குவரத்து துறை மீறல்கள் என 1,72,052 வழக்குகள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த ஆண்டு 3 கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர்களுக்கு ஆயுள் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 'உங்கள் துறையில் முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற காவலர்கள் குறைதீர் கூட்டத்தில் 267 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் உரிய காலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.

 

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க 6 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தற்போது அவர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில் சட்டவிரோத சில்லறை மது விற்பனை, பட்டாசு விற்பனை ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் 5 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் தகுந்த பாதுகாப்புடன் கொண்டாட முன்னெச்சரிக்கை பாதுகாப்பு திட்டம் ஏற்படுத்தப்பட்டு, கடந்த 1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு 50 அலுவலர்கள், 250 காவலர்கள் என மொத்தம் 300 பேர் பணியாற்றி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.