Skip to main content

ஒரே பதிவெண்ணில் 2 வேன்கள்; நூதன முறையில் பல ஆயிரம் லிட்டர் பால் திருட்டு

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

2 vans in the same registration; theft of thousands of liters of milk in a modern way

 

வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது ஆவின் பால் பண்ணை. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளிடமிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் பெறப்பட்டு பால் பாக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டு சுமார் 600 முகவர்களுக்கு 20 ஒப்பந்த வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

 

ஆவின் பால் பண்ணையில் அடிக்கடி பால் திருட்டு சம்பவங்கள் நடப்பதாக சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் பால் பாக்கெட்டுகளை ஆவின் பண்ணையிலிருந்து முகவர்களுக்கு வாகனம் மூலம் விநியோகம் செய்ய ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுக்கும் விற்பனை செய்யப்படும் பாலுக்கும் வித்தியாசம் இருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

 

இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஜூன் 5 ஆம் தேதி மதியம் பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் செல்ல பல பால் வேன்கள் பாலகத்தின் உள்ளே வந்தது. உள்ளே வந்த வாகன எண்களை ஆவின் காவலாளி பதிவேட்டில் எழுதினார். அதனை சரி பார்த்தபோது ஒரே வாகன எண்ணில் இரண்டு வண்டிகள் உள்ளே சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் விரைந்து வந்து பார்த்த போது TN 23 AC 1352 என்ற ஒரே எண்ணில் இரண்டு வேன்கள் பல ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட் பாலை ஏற்றிக் கொண்டு புறப்படத் தயார் நிலையில் இருந்தன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இரண்டு வேன்கள் மற்றும் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

 

இந்த நுாதன பால் திருட்டு சம்பவம் குறித்து ஆவின் அதிகாரிகள் கூறும் போது, ஒரே வாகன எண்ணில் பால் ஏற்றிச் செல்ல இருந்த 2 வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் புகார் செய்துள்ளோம். இரண்டு வேன் உரிமையாளர்களிடமும் வாகனத்தின் ஆவணங்களை எடுத்து வரச் சொல்லியுள்ளோம். விசாரணையின் முடிவில் இந்த சம்பவம் பால் திருட்டுக்காக நடந்ததா அல்லது வேறு காரணமா என்ற முழுமையான உண்மை நிலவரம் தெரியவரும் என தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.