கரூர் மாவட்டம், புகளூர் வட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் வர உள்ளதால் காவிரி கரையோர உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் அதிகாரிகள் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மாயனூர் கதவணை, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் அம்மா பூங்கா ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார். மேலும் தவிட்டுப் பாளையம் மற்றும் நஞ்சை புகலூர் பகுதியில் காவிரி கரையோரம் வசிக்கும் 150 குடும்பங்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் பிரபு சங்கர், “கரூர் மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ காவிரி ஆற்றில் இறங்கக்கூடாது. எந்தவித காரணத்திற்காகவும் காவிரி ஆற்றின் அருகே செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் நஞ்சை புகலூர், தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் வசிக்கும் 150 குடும்பங்கள் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காவிரி கரையோரம் உள்ள 26 கிராமங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் இன்று இரவுக்குள் 2 லட்சம் கனஅடி வீதமாக மாயனூர் காவிரி கதவணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாயனூர் காவிரி கதவணைக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வரும் தண்ணீர் முழுவதுமாக காவிரியில் திறந்து விடப்படுகிறது.
காவிரி கரையோர பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெள்ள அபாய எச்சரிக்கை விலக்கிக் கொள்ளும் வரை பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம்” எனத் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், வருவாய் கோட்டாட்சியர்கள் புஷ்பாதேவி (குளித்தலை), ரூபினா (கரூர்), தனித்துணை ஆட்சியர் சமூகப் பாதுகாப்பு திட்டம் சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.