Skip to main content

நகை சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் சுருட்டல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் திடீர் தலைமறைவு

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

2 Crore rupees rolled by conducting jewelery lottery; 6 members of the same family suddenly disappeared!

 

சேலத்தில் நகை சேமிப்பு திட்டம் நடத்தி 2 கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டு, ஒரு குடும்பமே திடீரென்று மாயமாகிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் குகை பச்சையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (72). இவருடைய மகன் ஆனந்த்பாபு (38). இருவரும் நகை தொழில் செய்து வருகின்றனர். நகை சேமிப்பு திட்டம், வாராந்திர சீட்டு சேமிப்புத் திட்டங்களையும் நடத்தி வந்தனர். அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் இவர்களிடம் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருந்தனர். முதிர்வு காலம் அடைந்த பிறகும் முதலீட்டுக்கான வட்டி, முதிர்வுத்தொகையை தராமல் ராமமூர்த்தி, ஆனந்த்பாபு ஆகியோர் காலம் கடத்தி வந்துள்ளனர்.

 

அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கி வருவதால் முதலீட்டாளர்கள் தினமும் அவர்களுடைய வீட்டிற்கே சென்று பணத்தைக் கேட்டுள்ளனர். நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்ததை அடுத்து, ராமமூர்த்தி, அவருடைய மனைவி கஸ்தூரி (67), மகன் ஆனந்த் பாபு, இவருடைய மனைவி ஐஸ்வர்யா, இவர்களின் இரண்டு குழந்தைகள் என 6 பேரும் திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டனர்.

 

ராமமூர்த்தியின் மகள் சாந்தா, வீட்டிற்குச் சென்று பார்த்தபோது வீடு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது அவர்கள் சென்ற இடம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அதேநேரம், தந்தை உள்ளிட்ட அனைவருடைய அலைபேசி எண்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா, இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் செப். 29ம் தேதி இரவு புகார் அளித்தார்.

 

நகை சேமிப்பு திட்டம், ஏலச்சீட்டு நடத்தி வந்த ஆனந்த்பாபு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு புதிதாக வீடு கட்டி குடியேறியுள்ளதாக தெரிகிறது. இந்த வீட்டை முதலீட்டாளர்களின் பணத்தில் இருந்துதான் கட்டினார் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கத்துடன் அவர்கள் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்களா? அல்லது வெளியூர் சென்று விட்டார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.