Skip to main content

நொடியில் பறிபோன 2 உயிர்கள்; துடிதுடித்துப்போன குடும்பம்!

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
2 children electrocuted in Cholavaram

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அமைந்துள்ளது கண்ணியம்பாளையம் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. 40 வயதான இவர், விவசாயம் சார்ந்த தொழில்களைச் செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவா. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விஷ்வா என்பவருக்கு 12 வயதாகிறது. அங்குள்ள அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இளைய மகன் சூர்யா என்பவருக்கு 10 வயதாகிறது. இவரும் அதே பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில், குடும்பத் தலைவர் முனுசாமி தனது விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்துத் தனது குடும்பத்தைப் பாதுகாத்து வந்தார். கணவனும் மனைவியும் சேர்ந்து தங்களுடைய மகன்களை மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர். இத்தகைய சூழலில், முனுசாமியின் மகன்களான விஷ்வா மற்றும் சூர்யா ஆகிய இருவரும் பள்ளி விடுமுறை நாட்களில் அக்கம்பக்கத்தில் உள்ள தனது நண்பர்களுடன் விளையாடச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், கடந்த 16 ஆம் தேதியன்று விஷ்வா மற்றும் சூர்யா ஆகிய இருவரும் தங்களுடைய வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போது, ஒருவரை ஒருவர் ஓடிப் பிடித்துக்கொண்டு அந்த வயல்வெளியில் அங்கும் இங்குமாய் சென்றுகொண்டிருந்தனர். அந்த மகிழ்ச்சியான தருணத்தில்தான் அந்த பச்சிளம் சிறுவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.  அவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வயல்வெளிக்கு அருகில் ஒரு விவசாய பம்பு செட் இருந்துள்ளது.

அப்போது, அதைப் பார்த்தவுடன் அந்த இரண்டு சிறுவர்களும் விவசாய பம்பு செட் அருகே சென்றுள்ளனர். அந்த நேரத்தில் வயல்வெளியிலிருந்து பம்பு செட்டிற்கு ஒருவர் பின் ஒருவர் என வேகமாக ஓடியுள்ளனர். அதே வேளையில், அந்த பம்பு செட்டில் மின்கசிவு ஏற்பட்டு அந்த இடம் முழுவதும் மின்சாரம் பரவி இருந்தது. ஆனால், அதையெல்லாம் அறியாத சிறுவர்கள் அந்த வழியாகச் சென்றுள்ளனர்.  அப்போது, விவசாய பம்பு செட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் திடீரென யாரும் எதிர்பாராத சமயத்தில், அந்த 2 பச்சிளம் சிறுவர்களின் உடலில் மின்சாரம் பாய்ந்து அங்கிருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் விஷ்வா மற்றும் சூர்யா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர்மக்கள், அவர்களுடைய தந்தை முனுசாமிக்கு தகவல் தெரிவித்தனர். 

அப்போது, இதைக் கேட்ட முனுசாமி மற்றும் அவரது உறவினர்கள் கண்ணீர்விட்டுக் கதறிக்கொண்டே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பிணமாக இருக்கும் தங்களது இரண்டு மகன்களின் உடலைப் பிடித்துக்கொண்டு கதறித் துடித்தனர். தங்களுடைய 2 மகன்களையும் பறிகொடுத்த நிலையில், முனுசாமி - ஜீவா தம்பதியினர் உயிரிழந்த மகன்களைப் பார்த்து கண்ணீரில் தத்தளித்தனர். அந்த நேரத்தில், இதைப் பார்த்த ஊர்மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர். 

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சோழவரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பம்பு செட்டில் மின்கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அதே சமயம், வயல்வெளியில் விளையாடச் சென்றபோது மின்சாரம் தாக்கி சகோதரர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.