Skip to main content

லோன் செயலியால் தற்கொலை... உயிரைப் பறித்த 1,500 ரூபாய் ஆன்லைன் கடன் பாக்கி!

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

1,500 rupees debtor who took his life!

 

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் சென்னை மணலியை சேர்ந்த ஐடி பெண் ஊழியர், கரூரில் ஒரு மாணவர் என இரண்டு பேர் ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவர் லோன் செயலியால் தற்கொலை செய்து கொண்டது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்த சம்பவத்தில் 1,500 ரூபாய் பணத்திற்காக புகைப்படமானது ஆபாசமாக சித்தரிக்கப்பட்டதால் 29 வயது இளைஞர் பாண்டியன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞர் பாண்டியன். பட்டதாரி இளைஞரான இவர் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாமல் இருந்த பாண்டியன் செலவிற்காக ஆன்லைன் லோன் ஆப்பை டவுன்லோட் செய்து அதன் மூலம் 5,000 ரூபாய் கடன் பெற்று இருக்கிறார். கடன் தொகையில் 1,500 ரூபாயை செலுத்தாத நிலையில் பணத்தை கட்டுமாறு, லோன் ஆப் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. தொடர்ந்து இவர் பணத்தை கட்டாமல் இருந்ததால் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாட்சப் எண்ணிற்கு அனுப்புவோம் என மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

சொன்னபடியே அவதூறு பரப்பும் வகையில் பாண்டியனின் புகைப்படத்தை சித்தரித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு லோன் ஆப்  அனுப்பியுள்ளது. பாண்டியனே தவறான தொழிலுக்கு அழைப்பதுபோல் ஆபாசமாக சித்தரித்து பலருக்கு சமூகவலைதளம் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து பாண்டியன்  மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் பிரச்சனை ஏற்பட, பெற்றோரும் பாண்டியனை கண்டித்துள்ளனர். இதனால் பெற்றோர் முன்பே அறைக்குள் புகுந்து கொண்டு கதவை தாழிட்டுக் கொண்ட பாண்டியன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.