Skip to main content

கண்டெய்னர் லாரியில் மது பாட்டில்கள் கடத்தல்; கையும் களவுமாகப் பிடித்த போலீஸ் 

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

15 lakh liquor bottles smuggled from Puducherry container lorry seized

 

புதுச்சேரியிலிருந்து கடலூர், பண்ருட்டி வழியாக சென்னைக்கு ஒரு கண்டெய்னர் லாரியில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக கடலூர் குற்றத்தடுப்பு நுண்ணறிவு போலீசார் மூலம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கடலூர் மஞ்சக்குப்பம் அருகே ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது மீன்களை ஏற்றி செல்லும் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவற்றில் மீன்கள் எதுவும் இல்லை. சந்தேகமடைந்த போலீசார் அந்த பெட்டிகளை இறக்கி வைத்து உள்ளே பார்த்தபோது அந்த லாரியின் உள்ளே ஏராளமான மதுபாட்டில் பெட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 

இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரியையும் லாரியை ஒட்டி வந்தவர்களையும் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த லாரியில் வந்தவர்கள் புதுச்சேரி மாநிலம் தவளைக்குப்பத்தை சேர்ந்த பகலவன்(48) மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தேப் கத்தி மகன் கத்திரி(30) என்பதும், இவர்கள் புதுச்சேரியிலிருந்து கடலூர் வழியாக சென்னைக்கு மது பாட்டில்களை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. மதுபானங்கள் விற்கப்படும் ஒரு கடையில் இருக்கும் பெட்டிகளின் எண்ணிக்கை போன்று 280 பெட்டிகள் இருந்தது. லாரி மற்றும் மது பாட்டில்கள் மதிப்பு ரூபாய் 15 லட்சம் ஆகும். பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு செல்வதை விட புதுச்சேரியிலிருந்து கடலூர், பண்ருட்டி வழியாக சென்னைக்கு செல்வது அதிக கிலோமீட்டர் கொண்டதாகும். இருப்பினும் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு செல்லும்போது 2,3 சோதனைச் சாவடிகளை கடந்தாக வேண்டும். அப்போது போலீசாரிடம் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதற்காக கடலூர் வழியாக மதுபாட்டில்களை கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட மதுபாட்டில் பெட்டிகளில் அதிக அளவில் பீர் பாட்டில்கள் இருந்தன. தற்போது கோடைக் காலம் தொடங்குவதால் மதுப்பிரியர்கள் அதிக அளவில் பீர் உபயோகப்படுத்துவார்கள் என்பதால் விலை உயர்ந்த பீர்பாட்டில்களையும், டின் பியர்களையும் கடத்தி வந்துள்ளனர்.

 

மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்ட லாரியின் உரிமையாளர் பகலவன். இந்த லாரி பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளது. தற்போது தான் அந்த வழக்குகள் முடிவடைந்து லாரியை பகலவன் ஓட்டியுள்ளார். தற்போது மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்ட லாரிக்கு தகுதிச் சான்று இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.