Skip to main content

"பாலன் இல்லத்தில் மகனின் காலடிசுவடு..." –நிலம் கொடுத்த அமலா சங்கர் மறைவு

Published on 25/07/2020 | Edited on 25/07/2020
amala shankar

 

இந்திய சுதந்திரத்திற்காகவும், ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்தியவர்கள், நடத்தி வருபவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்; அப்படிப்பட்ட கட்சிக்கு தலைமை அலுவலகம் கட்ட சென்னையில் இடம் கொடுத்தவர் புகழ் பெற்ற நாட்டியக் கலைஞர் அமலா சங்கர்.

 

சென்னையிலிருந்து மீண்டும் தனது சொந்த ஊரான கல்கத்தா போய் வசித்து வந்த அவர், தனது 101 வயதில் வயோதிகம் காரணமாக இன்று (25.7.20) கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

 

இவரது கணவர் உதயசங்கர், ஏற்கனவே இறந்து விட்டார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மேற்கு வங்கத்திலிருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரேனு சவுத்திரி என்பவர் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் தலைவர்களிடம், ‘சென்னையில் அமலா சங்கரின் கணவர் உதயசங்கர் உடல் நலமில்லாமல் உள்ளார். இவர்கள் புகழ்பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு நிலம் வழங்க முடிவு செய்துள்ளார்கள். உதயசங்கரின் மருத்துவ செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்ளுங்கள்,’ என கூறியிருக்கிறார்.

 

Balan Illam

 

அப்போது இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் எம்.கல்யாணசுந்தரம், ப.மாணிக்கம், ஏ.எஸ்.கே. ஆகியோர் மூலம் தற்போதைய ‘பாலன் இல்லம்’ இடம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அன்று வாங்கப்பட்டது. அப்போது விமான விபத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம் இறந்தார் ஆகவே அவர் நினைவாக அக்கட்டிடம் பாலன் இல்லம் என்று பெயர் வைக்கப்பட்டது.

 

நீண்ட காலம் பழைய கட்டிடமாக இருந்த அங்கு கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை வரும்போதெல்லாம் வந்து பார்வையிட்டுச் செல்வார், அமலா சங்கர். அவர் அந்த கட்டடத்தை வந்து பார்வையிடுவதற்கு முக்கியக் காரணம் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் தான்.

 

உதயசங்கர், அமலா, சங்கர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். புகழ்பெற்ற தாகூர் குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள். இவர்கள் குடும்பத்தை சேர்ந்த பலரும் நாட்டின் விடுதலை போராட்டத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பணியாற்றியவர்கள். அப்படிப்பட்ட இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை பிறந்தது, ஆண் வாரிசு.

 

தாகூர் குடும்பத்தில் ஒரு குடும்ப வழக்கம் இருந்திருக்கிறது. அது என்னவென்றால் சொந்த வீடு கட்டும்போது தங்களின் வாரிசுகளின் கால் தடத்தை அந்த வீட்டில் பதிவு செய்வார்கள். ஈரக் கலவையில் கால் தடம் பதித்து சில மணி நேரம் காய வைத்து விட்டால் அது எப்போதும் அழியாது. அப்படித்தான் தங்களின் குழந்தையின் கால் தடத்தை அந்த இல்லத்தில் பதிய வைத்திருந்தார்கள். இதில் பரிதாபகரமானது என்னவென்றால் சில ஆண்டுகளில் அவர்களின் குழந்தை இறந்து விட்டது. இதனால் வேதனையோடு வாழ்ந்த அத்தம்பதியினர் அந்த இடத்தை கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிரயம் செய்து கொடுத்த பிறகும் ஒவ்வொரு ஆண்டும் ஒருமுறையாவது அங்கு வந்து தங்களின் குழந்தையின் கால் தடத்தை பார்த்து அதை கைகளால் தடவிக் கொடுத்து சில நிமிடங்கள் இருந்து விட்டு செல்வார்கள்.

 

கணவர் உதயசங்கர் இறப்புக்கு பிறகும் அமலா சங்கர் பாலன் இல்லம் வந்து போயுள்ளார். இப்படி தியாகமும், நினைவலைகளும் கொண்டது அந்த பாலன் இல்லம். கட்சிக்கு நிலம் கொடுத்த அமலா சங்கரின் இறப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீர வணக்கமும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Next Story

“இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும்” - பாஜகவை விளாசிய து.ராஜா

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cpi National Secretary D. Raja has severely criticized the BJP

தமிழகத்திற்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவதற்கு வெட்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் து.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த து.ராஜா, “அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது மாறி இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பாஜக நாசகார செயலில் ஈடுபட்டு வருவதால் இந்தியா ஒரு ஜனநாயக குடியரசாக நீடிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, மக்கள் நலன் காத்திட, மாநில உரிமைகளை மதித்து செயல்படுகிற ஒன்றிய அரசாக இந்தியா தொடர்ந்து நீடிக்குமா? என்ற கேள்வியும் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் தான் இந்தத் தேர்தலை எல்லோருமே முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.

பாஜகவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும். மதவெறி பாசிசத்தை இந்தியாவில் நிலை நிறுத்த வேண்டும் எனவும், மதச்சார்பற்ற நாடு என்ற நிலையை மாற்றி மதவாத நாடாக்க முயன்று வருகிறது.  சட்ட நெறிகளை எல்லாம் அழித்து ஒழித்து விட்டு ஏற்றத்தாழ்வுகளை அப்படியே கட்டி காப்பாற்ற வேண்டும். ஆர்எஸ்எஸ் அஜண்டாவை நிறைவேற்றுகிற ஒரு கட்சியாக தான் பாஜக செயல்படுகிறது. இதற்கு பிரதமராக மோடி செயல்படுகிறார்

மோடி தமிழ்நாட்டுக்கு தற்போது அடிக்கடி வருகிறார். அவர் பிரதமர் என்ற முறையில் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வருவதற்கு வெட்கப்பட வேண்டும்.  தமிழ்நாடு பல பேரிடர்களை சந்தித்தபோதெல்லாம் மோடி வரவில்லை. தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை, நிவாரண நிதி கூட கொடுக்கவில்லை.

இந்தியாவில் முன்பிருந்ததை  விட அந்நிய கடன் அதிகரித்துள்ளது. இது பற்றி மோடி பொது வெளியில் விவாதிக்க தயாரா?  மோடி ஆட்சியில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு  வளர்ச்சி இல்லை.  மோடியின் அரசு மக்கள் விரோத அரசாக நாட்டு நலனில் அக்கறை இல்லாத ஒரு அரசாக, பெரு முதலாளிகளின் எடுபிடி அரசாக மாறிவிட்டது.  மதச்சார்பின்மையை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் தொடர்ந்து போராடுகிறோம். இந்தத் தேர்தல் களத்தில் மக்களிடம் வாக்கு கேட்கின்றோம்.

பாட்டாளி மக்கள் கட்சி பாஜகவோடு  அணி சேர்ந்து இருப்பது பெரிய துரோகம். பாட்டாளிகள் என்று சொல்லிக்கொண்டு பாஜகவோடு சேர்வது எவ்வளவு பெரிய கொள்கை மோசடி, துரோகம் என்பதை இன்றைக்கு மக்கள் கேட்கிறார்கள்.  அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற அதிமுக தமிழர்களின் உரிமைகளை மீட்போம் என்கிறார்கள். தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட போது இவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? மோடியை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்று எடப்பாடி பேசுவாரா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காத்திட, பாசிசத்தை வீழ்த்திட  ஸ்டாலின் அழைக்கிறேன் என்று குரல் கொடுத்து இருக்கிறார். அது அவருடைய குரல் மட்டுமல்ல,  தமிழ்நாடும் இந்தியாவும் ஒன்று பட்டு முன்னேற வேண்டும் என்று விரும்புகிற எல்லோரும் எழுப்புகிற குரல்.  இந்தியாவைக் காத்திட பாசிசத்தை வீழ்த்திட நாம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.  ஒன்றுபட்டு போராட வேண்டும். இந்தப் பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்திய அளவில் சமூக நீதி காப்பாற்றப்பட வேண்டும், ஜாதியை உடைத்து தகர்த்தெறிய வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று  போராடுகிற முன் களப்போராளியாக தொல்.திருமாவளவன் இருக்கிறார். எனவே அவருக்கு சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் வாக்களிக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, சிபிஐ மாநில கட்டுப்பாட்டுக் குழு மணிவாசகம், மாநில நிர்வாகக் குழு மருத்துவர் ரவீந்திரநாத், மாநிலக்குழு மருத்துவர் சாந்தி, மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், வட்டச் செயலாளர் தமீம் முன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.