வேலூரில் அரசுப்பள்ளி ஒன்றில் பள்ளி மேசைகளை மாணவர்கள் சேதப்படுத்தும் வீடியோ வெளியான நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 10 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் அருகேயுள்ள தொரப்பாடியில் மேல்நிலை அரசு பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. கடந்த சனிக்கிழமையன்று 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வகுப்புகள் முடிந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டிற்கு செல்லாத சில மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாத சமயத்தை பயன்படுத்தி வகுப்பறையில் இருந்த இரும்பு மேசைகளை சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தொரப்பாடி மேல்நிலை அரசுப்பள்ளியில் ஆர்.டி.ஓ. பூங்கொடி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி சம்பத் நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பள்ளி மேசைகளை மாணவர்கள் சேதப்படுத்தியது உறுதியானது. இதையடுத்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய 10 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.