Skip to main content

ஒரு லட்சம் அபராதம்... கலெக்டரின் அதிரடி...

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

இப்போதெல்லாம் விதிமுறைகளை கடைபிடிக்காத செயலுக்கு அரசு நிர்வாகம் விதிக்கும் அபராத தொகை என்பது விண்ணை தொடுகிறது. மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன புதிய சட்டத்தில் மிகவும் நொந்து போய் சிரமத்திற்குள்ளானவர்கள் அதிகம் இரு சக்கர வாகன ஓட்டிகள் தான்.
 

1 lakh fine in erode


அதே போல் தான் எல்லா நிலைகளுக்குமான புதிய விதிகள் வகுக்கப்பட்டு விதி முறைப்படி ஏன் நடக்கவில்லை இந்தா புடி அபராதம் என அதிகாரிகள் களத்தில் இறங்கி விட்டார்கள். சுகாதாரமாக இருக்கவில்லை தேங்கிய நீரை ஏன் சுத்தப்படுத்தவில்லை என ஒரு ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஈரோட்டில் ஒரு லட்சம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட எல்.ஐ.சி.நகர், மூலப்பாளையம், தீரன் சின்னமலை வீதி நேதாஜி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள்  டெங்கு தடுப்புப் பணிக்கான ஆய்வினை  மேற்கொண்டனர். அங்குள்ள வீடு, கடை மற்றும் வணிக நிறுவனங்களில் சுகாதாரச் சீர்கேடு மற்றும் டெங்கு கொசு உற்பத்தியாகக்கூடிய சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்கள்.

அப்போது ஹோட்டல் நடத்தும்  தனசங்கர் என்பவர் உணவு தயாரிக்கும் நிலையம் சுகாதாரமற்ற முறையில் இருப்தும், அதில் டெங்கு கொசு உருவாகும் சூழல் உள்ளதும் அவர்கள் ஆய்வில் தெரியவந்தது. இந்த உணவு மையத்தில் மட்டன், சிக்கன் பிரியாணிகள்  தயார் செய்யப்பட்டு ஈரோடு நகரின் பல்வேறு உணவகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் உறுதியானது. 

இதனை தொடர்ந்து இந்த உணவு தயாரிக்கும் நிலையத்தை சுகாதாரமாகப் பராமரிக்காததற்காக ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்க ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டார். அதேபோல் அந்த பகுதியில் உள்ள பல வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழல் இருந்ததால், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. 


மூன்று வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை. அதனால் இந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பைத் துண்டிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார். கலெக்டர் சி.கதிரவன் இது பற்றி கூறும்போது, "ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும் வகையில், வீடு, தொழிலகம், கடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெங்கு கொசு ஒழிப்புப் பணிக்காக ஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ஆட்சியர் செயல்பாட்டை பலரும் பாராட்டும் அதே வேளையில் மநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் இதையே காரணம் காட்டி ஆயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் என வீடுகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சென்று வசூலில் ஈடுபடுவதாகவும் பல தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.