இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாள் சென்னை அடையாறில் உள்ள மணி மண்டபத்தில் இருக்கும் சிவாஜி கணேசனின் உருவப்படத்துக்கு மலர் தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிவாஜி குடும்பத்தை சேர்ந்த பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும், அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜு அதிமுக இலக்கிய அணி செயலாளர் வளர்மதி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதேபோல நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகரும் சிவாஜியின் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி. சேகர், “உலகில் தலை சிறந்த நடிகர் சிவாஜி. அவர் செய்யாத கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால் அவருக்கு மரியாதை செலுத்த இன்னும் நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் வரவில்லை என்பது அயோக்கியத்தனம். இதற்கு நடிகர் விஷால்தான் காரணம். கருப்பு பலூன் விடுபவர்கள் ஒன்றாகச் சேரும் போது, ஒரே கருத்து உள்ள ரஜினி மட்டும் பாஜகவில் இணையக் கூடாதா? என்றும் கூறினார். அப்போது ரஜினி கண்டிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார். அவர் முதல்வராகக் கூடிய வாய்ப்பும் உள்ளது. அதே போல் தேர்தலில் யார் அதிக எண்ணிக்கையில் சீட்டுகளைப் பெறுகிறார்களோ, அவர்கள்தானே முதல்வராக முடியும். பாஜகவுடன் கூட்டணி அமைத்தாலும் ரஜினிதான் முதல்வர் என்று பாஜகவே அறிவித்தாலும் ரஜினிதான் முதல்வராகப் போகிறார். மேலும் இனிமேல் பாரதிய ஜனதா கட்சியின் தயவு இல்லாமல், எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.