Skip to main content

200 இடங்களில் ஜெயிக்காவிட்டால் பா.ஜ.க தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவார்களா?  - பிரசாந்த்கிஷோர் மீண்டும் சவால்..!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

Will BJP leaders quit the party if they do not win 200 seats? - Prasanth Kishore is challenged again ..!


“200 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. ஜெயிக்காவிட்டால், அந்தக் கட்சியின் தலைவர்கள் கட்சியிருந்து விலகுவார்களா?'” என்று பிரசாந்த் கிஷோர் சவால் விட்டுள்ளார்.


மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 200 இடங்களுக்கும் அதிகமாக வெல்லாவிட்டால், அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பா.ஜ.க.விலிருந்து விலகுவார்களா என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் சவால் விடுத்துள்ளார். 


மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் முதல்வர் மம்தாவின் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் கடந்த சில நாட்களாக மோதல்கள் வெடித்தபடி இருக்கின்றன. அண்மையில், மேற்கு வங்கத்துக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசின் 7 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். 


இதனால், மேற்கு வங்கத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோரின் நிறுவனமான ஐ-பேக் தான் வகுத்துக் கொடுத்துவருகிறது. இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் “குறிப்பிட்ட சில ஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரங்களால் பா.ஜ.க. வலுவாகக் காண்பிக்கப்படுகிறது. உண்மையில், மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப் போகிறது.


என்னுடைய ட்விட்டர் பதிவைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்” எனச் சமீபத்தில் சவால்  விடுத்திருந்தார். 

 

இந்தநிலையில், இன்று மீண்டும் ஒரு சவாலை பா.ஜ.க.வுக்கு விடுத்துள்ளார் பிரசாந்த் கிஷோர். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பி.கே., “மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் என்னுடைய கணிப்பின்படி 100 தொகுதிகளுக்கும் குறைவாகத்தான் பா.ஜ.க.வுக்குக் கிடைக்கும். ஒருவேளை 200 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. ஜெயிக்காவிட்டால், அந்தக் கட்சியின் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவார்களா?'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால், டென்சனில் இருக்கிறார்கள் மேற்கு வங்க பா.ஜ.க. நிர்வாகிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.