Skip to main content

தி.மு.க.வின் புதிய துணைப்பொதுச் செயலாளர் யார்? - எதிர்பார்ப்பில் உடன்பிறப்புக்கள்!

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

Who is the new Deputy General Secretary of DMK? -

 

தி.மு.க.வின் புதிய துணைப் பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி, சூறாவளியாய் சுழன்றடிக்கிறது. கட்சியின் ஐந்து துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் அண்மையில் ராஜிநாமா செய்ததையொட்டி அவரது இடம் காலியாக இருக்கிறது. அந்தப் பதவியில் புதிதாக உட்காரப்போவது யார் என்பதுதான் இப்போது தி.மு.க. தொண்டர்களின் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு.

 

முன்பு திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் இறந்த போதே, அந்தப் பொறுப்பை கனிமொழிக்கு கொடுக்கப்போவதாக எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், அப்போது சுப்புலட்சுமி ஜகதீசன் அந்தப் பதவியில் அமரவைக்கப்பட்டார். இப்போது அவர் விலகியதை அடுத்து காலியான பதவி கனிமொழிக்குக் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மகளிணியினரிடமும் தி.மு.க.வினரிடமும் பலமாக இருக்கிறது. இந்தப் பதவிக்கு கனிமொழியோடு மேலும் ஒரு சிலரின் பெயர் அடிபட்டுவரும் நிலையில், பெரும்பான்மையானவர்கள் கனிமொழியே இந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துவருகிறார்கள். 

 

இது குறித்து திமுக மகளிரணி நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது “தமிழ்நாட்டு அரசியல் சூழலில் எப்போதும் பெண்கள் தங்களுக்கான இடத்தை பிடிப்பதற்குக் கடுமையாகப் போராட வேண்டும். அதுவும் ஒரு பெண் தலைமை பொறுப்புக்கு வருவது அவ்வளவு எளிதானதல்ல. அப்படி இருக்கையில், தன்னை கடுமையான கட்சிப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மகளிரணி செயலாளர் கனிமொழிக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக் கொடுத்தால், அது பொருத்தமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்” என்கிறார்.

 

நாம் சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரோ “தலைவர் கலைஞர் இருந்த வரை கழகத்தை அரண்போல காத்து நின்றார். அவருக்குப் பின் ஸ்டாலின் அவரைப் போலவே கட்சியைக் கட்டிக்காத்து கம்பீரமாக வழி நடத்துகிறார். அதேபோல் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழியும் ஒரு பவர்ஃபுல் பொறுப்பில் இருப்பது, கட்சிக்கும் பெருமையானது. அதனால் அவருக்கு  துணைச் செயலாளர் பொறுப்பைக் கொடுக்கலாம்”என்று கூறினார்.

 

அதேபோல், அண்ணா அறிவாலயத்தின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “பெரியாரின் ஆற்றல்மிக்க கொள்கைகளின் மீதும், அண்ணாவின் உரிமை சார் போராட்டங்களின் மீதும், கலைஞரின் அறிவார்ந்த செயல்பாடுகள் மீதும், தளபதியின் தலைமையின் மீதும் நம்பிக்கை கொண்டு செயல்படுபவர்கள் தற்போது அதிகம் தேவைப்படுகிறார்கள். அந்த விதத்தில் இன்று கனிமொழி முக்கியமானவர். கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழகத்தின் வெற்றிக்கு  உறுதுணையாக இருந்திருக்கிறார். அவர் அப்பொறுப்பிற்கு வந்தால் நன்றாக இருக்கும். அதோடு அவரது செயல்திறன் தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைத் தி.மு.க. கோட்டையாக்கி இருக்கிறது. அண்மையில் நெய்தல் நிகழ்ச்சியை நடத்தியும் அனைத்துத் தரப்பினரின் ஈர்ப்பையும் கட்சியின் பக்கம் திருப்பி இருக்கிறார். அதனால் கனிமொழிதான் சிறந்த சாய்ஸ்” என்கிறார். 

 

“பல ஆண்டுகள் கட்சியின் சாதாரணத் தொண்டரைப் போல உழைத்து, கொள்கை ரீதியாகவும் களப்பணிகள் மூலம் தன் முக்கியத்துவத்தை உறுதி செய்தவர் கனிமொழி. அவர்தான் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்குச் சரியான ஆளாக இருப்பார்” என்று மூத்த பெண் நிர்வாகி ஒருவர் கூறுகிறார்.

 

தமிழ்நாட்டு அரசியலைத் தொடருந்து கவனித்துவரும் அரசியல் விமர்சகர் ஒருவரிடம் இந்தத் துணைப் பொதுச் செயலாளர் தேர்வு குறித்து பேசுகையில், "நம் மாநிலத்தின் அரசியலில் எப்போதும் ஆண்களே ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு கனிமொழியிடம் பெண் ஆளுமை இருக்கிறது. இப்போது துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், திமுகவிற்கு வலிமை சேர்க்கும் என்று தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.

 

இப்படியாகக் கட்சியினர் மற்றும் அரசியல் ஆர்வலர்களின் கருத்துகள் இருக்கிறது. இம்முறை துணைப் பொதுச்செயலாளராகக் கனிமொழி தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அது திமுகவின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி பல வழிகளில் நன்மைத் தரக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள் பலரும். நவம்பர் 9-ல் கூடும் பொதுக்குழு, கனிமொழியின் வியர்வைக்கு மகுடம் சூட்டுவதாக இருக்கும் என்கிறார்கள் தி.மு.க.வில் இருக்கும் பலரும்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.