War of words on social media between minister trb Raja and Annamalai

தமிழகத்தில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது ஆவின் நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘அமித்ஷாவின் 9 ஆண்டுக்கால வரலாற்றில் மு.க.ஸ்டாலின் எழுதியதைப் போல் தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பால்வளத்துறைக்கும் அமித்ஷா துறைக்கும் சம்பந்தம் இல்லை என்ற வகையில் பதிவிட்டிருந்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, இதற்கு பதிலளித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “தமிழக பா.ஜ.க.விற்கு 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தது போதவில்லை என நினைக்கிறேன். இன்னும் நிறைய படிக்க வேண்டியுள்ளது. முதலில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும். அதற்கு முன்பு மத்திய அமைச்சரவையில் யாரெல்லாம் அமைச்சர்கள், அவர்கள் வசமிருக்கும் துறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். அமுல் என்பது கூட்டுறவு சங்கம். மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் அமித்ஷா. எனவே தான் அவருக்கு கடிதம் எழுதப்பட்டது. தமிழக பாஜகவிற்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. தங்கள் சொந்த அரசை பற்றியே தெரியவில்லை. உங்கள் தலைவர்களை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவதை எப்போது தான் நிறுத்தப் போகிறீர்களோ? நீங்கள் அடிக்கும் ஜோக் உங்களுக்கு தான். 9 ஆண்டுகால வரலாறு என்று கூறினீர்களே? அமித்ஷா அமைச்சராக இருப்பதே கடந்த 4 ஆண்டுகளாகத்தான். இது கூடவா தெரியவில்லை” என்று அண்ணாமலையின் ட்விட்டை ரீட்விட் செய்து விமர்சனம் செய்தார்.

Advertisment

இந்த நிலையில் தற்போது அண்ணாமலை வெளியிட்ட பதிவில், “தந்தையின் பாரம்பரியத்தில் இயங்குபவருக்கு மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து சில பள்ளிகளில் படிப்பு தேவைப்படும். அமுல் மற்றும் நந்தினி, நந்தினி மற்றும் மில்மா பால் நிறுவனங்களுக்கு இடையேயான எல்லை தாண்டிய சந்தைப்படுத்துதல் தொடர்பான சிக்கல்களை தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தீர்த்து வருகிறது. பால்வள மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நீங்கள் தமிழகத்தின் தொழில்துறை அமைச்சராக இருப்பது வருத்தம் அளிக்கிறது’ தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத்துறையா அல்லது பால்வளத்துறையா என்று கூட தெரியாமல் அண்ணாமலை குழம்பி விட்டதாக இணைய வாசிகள் அண்ணாமலையை கிண்டலடித்து வருகின்றனர்.