Skip to main content

கவுதமி சிரிப்பாரா? சீரியஸ் முகம் காட்டுவாரா?-கேள்விக்கு பதிலளிக்க தாமரைக் கட்சியினர் தயாரா? 

Published on 28/02/2021 | Edited on 28/02/2021

 

viruthunagar district bjp meeting gautami at rajapalayam

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் நம்மிடம்  “சும்மாவே சொல்லிக்கிட்டிருக்காங்க.. தமிழகத்தில் ஆளும் கட்சியா இருக்கிற அ.தி.மு.க.வை,  மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்டிப் படைக்குதுன்னு.. அது ரொம்பவும் சரிதான்னு சொல்லுற மாதிரி.. இந்த சுதாகர் ரெட்டி (பா.ஜ.க. சட்டமன்றத் தொகுதி மேலிட தேர்தல் இணை பொறுப்பாளர்) ‘சகோதரி கவுதமி இந்த ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’னு ஆலோசனைக் கூட்டத்துல பேசிருக்காரு. தமிழகத்துல யார் தலைமையில் தேர்தல் கூட்டணின்னு அ.தி.மு.க. தொண்டர்கள் சந்தேகப்படற மாதிரி இதெல்லாம் நடந்துக்கிட்டிருக்கு. கூட்டணி முடிவாகி, தொகுதி உடன்பாடு குறித்தப்  பேச்சுவார்த்தை நடந்து, எந்த தொகுதி எந்தக் கட்சிக்குன்னு அறிவிப்பு வெளியாகுறதுக்கு முன்னாலயே, சுதாகர் ரெட்டி தன்னிச்சையா ராஜபாளையம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கவுதமிதான்னு பேசியது சரியில்ல..” என்று விசனப்பட்டார்.

viruthunagar district bjp meeting gautami at rajapalayam

இதே கேள்வியைச் செய்தியாளர்களும் சுதாகர் ரெட்டியிடம் கேட்க “ஒரு தேசிய  கட்சியில் ஒரு வேட்பாளரை அறிவிப்பதற்கென்று ஒரு முறை உள்ளது. தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கும், வேட்பாளர் தேர்வை நடத்துவதற்கும் எங்களது பாராளுமன்ற வாரியத்துக்கு மிக உயர்ந்த அதிகாரம் உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாகப் பேச்சுவார்த்தை நடத்துவோம். விரைவில் எங்களது வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.” என்று  பதிலளித்து சமாளித்தார்.

viruthunagar district bjp meeting gautami at rajapalayam

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியின் பா.ஜ.க. பொறுப்பாளரான நடிகை கவுதமி ஆலோசனைக் கூட்டத்தில் பேசியபோது  ‘கேள்வி கேட்பேன்; பதில் சொல்லவில்லை என்றால் என்னுடைய இன்னொரு பக்கத்தைப் பார்ப்பீர்கள்!’ என, பா.ஜ.க. தொண்டர்களுக்கு செல்லமாக மிரட்டல் விடுத்தார். கவுதமியின் காரசார உரை இதோ - “என்னைப் பொறுத்த வரைக்கும் இந்தத் தேர்தலில் நம்மள நாம தயார் பண்ணிக்கிறது, நம்முடைய பயணத்தில் முதல்படி மட்டும்தான். இதற்கப்புறம் நம்முடைய பயணம், எவ்வளவோ இருக்கு. இன்னும் எத்தனையோ தேர்தல்கள்.. எத்தனையோ போட்டிகள்.. இன்னும் எவ்வளவோ வளர வேண்டியிருக்கு. மத்தியில் இருந்து எத்தனையோ தலைவர்கள் வந்து நம்மை உருவாக்க வேண்டியிருக்கு. அதற்கான தயாரிப்புதான் இந்த தேர்தலுக்கான இந்த வேலைகளை நாம பண்ணிக்கிட்டிருக்கோம். இந்த விஷயம் நான் திரும்பத் திரும்ப.. அடுத்த ஒரு மாசத்துக்குள்ள நான் நெறைய தடவை சொல்லப்போறேன். அப்பப்ப நின்னு நான் வந்து உங்கள கேள்வி கேட்கப்போறேன்.  அன்னைக்கு நான் என்ன சொன்னேன்னு உங்ககிட்ட கேட்கப்போறேன். அப்ப நீங்க பதில் சொல்லலைன்னா.. இந்த சிரிப்புக்கு இன்னொரு பக்கத்தை நீங்க பார்க்கப்போறீங்க. சரிங்களா? ஏன்னா.. மறந்துடாதீங்க.” என்று பேசி முடித்தார். 

 

‘ஆமாம் கவுதமி.. இப்ப நீங்க என்ன பேசினீங்க? அடுத்து என்ன கேட்கப் போறீங்க?’ என மண்டை காய்ந்த தாமரைக் கட்சியினரின் மைன்ட் வாய்ஸை,  நிச்சயமாக கவுதமியின்  இன்னொரு பக்கம் ‘கேட்ச்’ பண்ணியிருக்காது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.