Skip to main content

"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...

Published on 15/01/2021 | Edited on 16/01/2021

 

vanathi srinivasan shares memories about gnanadesigan

 

த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். வழக்கறிஞரான ஞானதேசிகன், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்ததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அவருடன் சேர்ந்தே ஞானதேசிகன் செயல்பட்டார்.

 

த.மா.கா.வில் முக்கிய பதவிகளை வகித்துவந்தார். பின்னாளில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். இந்நிலையில், மறைந்த ஞானதேசிகன் உடனான சில நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன். அவரது பதிவு பின்வருமாறு...

 

vanathi srinivasan about gnanadesigan

 

"ஞானதேசிகன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகச் செயலாற்றியவர். தமிழகத்தில் வளமாக, அழுத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த தேசியத்தினுடைய ஒரு குரல் இன்று ஓய்ந்திருக்கிறது என நான் கருதுகிறேன். வழக்கறிஞர் தொழிலில் அவரது ஜூனியராக கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் நான் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வழக்கறிஞர் தொழிலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய எனக்கு ஆதரவாக இருந்த ஒருவரை நான் இழந்திருப்பதாக உணர்கிறேன். எந்த நேரத்திலும் சமரசமில்லாத ஒரு தேசிய குரலுக்குச் சொந்தக்காரர் அவர். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தும் கூட அவரது அலுவலகத்தில் ஜூனியர் வழக்கறிஞராக எனக்கு வாய்ப்பளித்தார். எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய ஒரு சக்தியாக அவர் இருந்தார். 

 

தமிழகத்தின் ஒரு அப்பழுக்கற்ற தேசிய நீரோட்டத்திலிருந்த ஒரு ஆளுமை மறைந்திருப்பது என்பது எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன். இது எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பாக நான் கருதுகிறேன். என்னுடைய அப்பாவிடம் பேசி எனது திருமணத்தை நடத்தி வைப்பதில் மிக முக்கிய பங்காற்றியவர். ஆரம்ப காலகட்டத்தில் எனது வக்கீல் தொழிலில் சிறந்த பயிற்சியைக் கொடுத்ததோடு, இந்த தொழிலில் மக்களுக்கு உதவ எந்த அளவு தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதையும் எனக்குப் புரிய வைத்தவர் அவர். 

 

WhatsApp Image 2021-01-16.jpg

 

திருமணமாகி நான் டெல்லியில் வழக்கறிஞர் பணியிலிருந்தபோது, நான் மீண்டும் தமிழகம் திரும்ப முக்கியமான காரணமாக அவர் இருந்தார். தமிழகத்திலேயே நல்ல வாய்ப்புகள் உண்டு நீங்கள் ஏன் இங்கு திரும்பி வரக்கூடாது எனவும், என் அலுவலகத்திலேயே நீங்கள் பணியாற்றலாம் எனக்கூறி அவர் விடுத்த அழைப்பின் காரணமாகவுமே திரும்பவும் நாங்கள் தமிழகம் வந்தோம். அனைவரிடமும் நட்பு பாராட்டக் கூடியவர். கட்சி பேதமின்றி ஒரு சிறந்த மூத்த வழக்கறிஞருக்கு உதாரணமாக இருந்தவர். எனக்கு முதல் சம்பளத்தைக் கொடுத்த மூத்த வழக்கறிஞர் அவர். நான் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபாட்டுடன் இருந்து அதில் முன்னேறி வருவதற்கு மிக முக்கிய காரணம் அவர்".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 Postponement of the program of alternative parties joining the BJP

பா.ஜ.க.வில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இணையும் நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று (26.02.2024) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளதாக பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பின்படி இன்று மாலை நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றிருந்தனர். இருப்பினும் நிகழ்வு நடைபெற இருந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் பா.ஜ.க.வினர் யாரும் வரவில்லை. அதன் பின்னர் மாலை 06.40 மணியளவில் பா.ஜ.க. தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பாஜ.க. மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் உள்ளிட்டோர் வந்தனர்.

அதன் பின்னர் கே.பி. ராமலிங்கம் பேசுகையில், “இன்றைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்கள் பா.ஜ.க.வில் இனைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் கட்சியில் இணைபவர்கள் மோடியை சந்திக்க வைப்பதற்கு கால அவகாசம் தேவைப்பட்டதாலும், பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். 

Next Story

“மதுரை எய்ம்ஸ் போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும்” - முதல்வர் பதிலடி

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Unlike AIIMS Madurai will be completed in time CM response 

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி இன்று வரை நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். மேலும் கடந்த 20 ஆம் தேதி (20.02.2024) 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதே சமயம் பொது நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்தன.

அந்த வகையில் சட்டபேரவையில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவையில் நூலகம் அமைக்கப்படுவது தொடர்பாக நேற்று (21.02.2024) கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளிக்கையில், “சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாக, விளக்கமாக, விரிவாக அமைச்சர் தங்கம் தென்னரசு  பதிலளித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய வகையில் அமைந்திருக்கிற காரணத்தால் என்னுடைய வாழ்த்துகளையும் மனதார நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நேற்றைய தினம் விவாதத்தின்போது சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வினாவிற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால் அதேநேரத்தில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்  வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை. அவர் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு அது எங்கே அமையவிருக்கிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள், எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார். அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்திற்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும்.

மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் அமையப் பெற்றிருக்கின்றனவோ, இன்னும் சில தினங்களில் நம்முடைய கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் அதுவும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும். ஆனால்  வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நிச்சயமாக மதுரையில் எய்ம்ஸ் (AIIMS) அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டு விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.