Skip to main content

கோவில்பட்டியில் டி.டி.வி. தினகரன்..?

Published on 28/12/2020 | Edited on 11/03/2021

 

TTV Dinakaran will contest in kovilpatty

 

சட்டமன்றம், நாடாளுமன்றம் என எந்த வடிவில் தேர்தல் வந்தாலும், தங்களுடைய தலைவர் இந்தத் தொகுதியில்தான் போட்டியிட வேண்டுமென்பது பலரின் விருப்பம். இந்த விருப்பங்கள் தங்களுடையத் தலைவரின் மீதான அபிமானத்தைக் காட்டுவதாக இருந்தாலும் ஒரு சிலரின் விருப்பமும் நிறைவேறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், “டி.டி.வி. தினகரன், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது” என்கிறார் அ.ம.மு.க. தேர்தல் பிரிவுச் செயலாளர் மாணிக்கராஜா.

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதியான கடலையூர் சாலையில்,  ஒ.செ. விஜயபாஸ்கரன் ஏற்பாட்டில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமையில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரனின் 57 வது ஆண்டு பிறந்த நாள் விழா நடைப்பெற்றது. இதில், பிரஷர் குக்கர் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

 

TTV Dinakaran will contest in kovilpatty


இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 500 நபர்களுக்கு பிரஷர் குக்கர் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அ.ம.மு.க. தேர்தல் பிரிவுச் செயலாளரும், கட்சியின் தென்மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா, “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் டி.டி.வி. தினகரன், யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அ.ம.மு.க. நிச்சயமாக வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. 

 

கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க நாகர்கோவில் செல்லும் வழியில் கோவில்பட்டியில் அளிக்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பையும் மக்கள் எழுச்சியையும் கட்டுக்கடங்காத கூட்டத்தையும் பார்த்துவிட்டு டி.டி.வி. தினகரன் என்னிடம், “எந்தத் தொகுதியில் நிற்கலாம் என சிந்தித்துக் கொண்டிருந்தேன். கோவில்பட்டியிலேயே  போட்டியிடலாம் என இப்போது நினைக்கிறேன்” என்று கூறினார். 

 


ஒரு முதலமைச்சர் வேட்பாளர் கோவில்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது கோவில்பட்டி சிங்கப்பூர் போன்று மாறும். கட்டாயம் நீங்கள் கோவில்பட்டியில் போட்டியிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரனிடம் நான் வலியுறுத்தினேன். ஆக டி.டி.வி. தினகரன் இங்கு நிற்பது உறுதி” என்றார்.

 


ஆண்டிபட்டி, மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் டி.டி.வி. போட்டியிடக் கூடும் என கணிக்கப்பட்ட சூழலில், டி.டி.வி. மனதில் கோவில்பட்டி தொகுதி இடம் பெற்றிருப்பதாக அ.ம.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்க, வி.ஐ.பி. அந்தஸ்தினை எட்டியுள்ளது கோவில்பட்டி.

 

 

படங்கள்: விவேக்

 

சார்ந்த செய்திகள்

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

“இந்த ஜென்மத்தில் நான் கொடுத்து வச்ச பாக்கியம் இது” - டி.டி.வி தினகரனின் மனைவி!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
TTV Dhinakaran's wife Anuradha is campaigning in Theni constituency

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.வில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில்  நாராயணசாமி, பிஜேபி கூட்டணி சார்பில் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உள்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வளம் வருகிறார்கள். இருந்தாலும் திமுக, அதிமுக, டிடிவிக்கு இடையே தான் கடும் போட்டியும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் பிஜேபி கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தொகுதியில் பல ஊர்களில் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மேலும் தேர்தல் பிரச்சாரம் செய்யவும் இருக்கிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சார செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று சொல்லி இருக்கிறார். அதன் அடிப்படையில் தான் டிடிவி மனைவியான அனுராதா தனது கணவருக்காக தேனி  பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில்  வாக்காளர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

TTV Dhinakaran's wife Anuradha is campaigning in Theni constituency

அந்த வகையில்,  முதன் முதலில் போடி தொகுதியில் உள்ள முத்தையன் செட்டிபட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரச்சாரத்தை அனுராதா தொடங்கினார். அப்போது அங்கு குடியிருந்த பெண்கள் மாலை சால்வை அணிவித்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அனுராதா பேசும் போது, உங்கள் வீட்டுப் பிள்ளை செல்வன் டிடிவி மனைவியாக உங்களிடம் நான் வந்திருக்கிறேன். அவர் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்ய சென்று விட்டதால் ஒரு வாரம் பிரச்சாரத்திற்கு வரமாட்டார். அதனால் நான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். இந்த ஜென்மத்தில் நான் கொடுத்து வச்ச பாக்கியம் இது. 16 வருடத்திற்கு பிறகு இங்கு வந்திருக்கிறார். அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றுதான் எனது தாழ்மையான வேண்டுகோளை உங்களிடம் வைக்கிறேன்” என்று வாக்காளர் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

அதோடு ஜாதி ரீதியாகவும் தலைவர்களை சந்தித்தும் வீடுகளுக்குள் சென்று வாக்காளர்களிடமும், பெண்களிடமும் ஆதரவு திரட்டி வருகிறார் அது போல் பிரச்சார வேனில் ஒவ்வொரு பகுதியாக சென்று குக்கர் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காள மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.