Skip to main content

அமித்ஷாவுக்கு நன்றி சொன்ன தினகரன்!

Published on 30/03/2019 | Edited on 30/03/2019




அ.ம.மு க.விற்கு பொதுச் சின்னம் கிடைத்ததில் குஷியாகியிருக்கிறார் தினகரன். தினகரனுடன் பாஜக ரகசிய கூட்டணி வைத்திருப்பதால் பொதுச்சின்னம் அவருக்கு எளிதாகக் கிடைத்துள்ளது என்கின்றன டெல்லி தகவல்கள். 


பாஜகவுக்கு எதிரான சிறுபான்மை வாக்குகளும், அதிமுக ஆட்சிக்கு எதிரான வாக்குகளும் திமுக கூட்டணிக்கு செல்வதை தடுப்பதற்காக தினகரனுடன் பாஜக ரகசிய கூட்டணி வைத்திருப்பதையும் அதற்கான காரணங்களையும் கடந்த வாரம் விரிவாக எழுதியிருந்தோம். அதனை நிரூபிக்கும் வகையில் தினகரனுக்கு பொதுச்சின்னம் கிடைக்க உதவி செய்திருக்கிறது பாஜக தலைமை. 


இது குறித்து பாஜக தலைமைக்கு நெருக்கமான தமிழக அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிரான வாக்குகள் திமுகவிற்கு செல்லும் போதுதான் அதன் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. அதனை தடுப்பதற்கு பாஜக தூக்கிப்பிடிக்கும் முகம்தான் தினகரன். அதே சமயம், தனது வெற்றி சின்னம்மான குக்கர் சின்னம் அ.ம.மு.க.விற்கு கிடைக்க உதவி செய்ய வேண்டும் என அமீத்ஷாவிடம் கோரிக்கை வைத்திருந்தார் தினகரன்.


 

ttv dhinakaran ammk gift box symbol



இது குறித்து பாஜக தலைமை, தேர்தல் ஆலோசகர்களிடம் விவாதித்தபோது, 'குக்கர் சின்னம் அவருக்கு கிடைத்தால் அவர் வலிமையடைய வாய்ப்பிருக்கிறது' என சொன்னதன் அடிப்படையில் அதனை கிடைக்கவிடாமல் செய்தது பாஜக தலைமை.


இந்த நிலையில், அப்செட்டான தினகரன் தரப்பு, 'குக்கரை முடக்கிவிட்டீர்கள். ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு சுயேட்சை சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டால் உங்கள் திட்டம் நிறைவேறாது. அதனால், பொதுச்சின்னம் கிடைக்க உதவி செய்யுங்கள்' என வலியுறுத்தியது.


அதனை பல விவாதங்களுக்கிடையில் ஒப்புக்கொண்டது பாஜக. அதற்கேற்ப சில அட்வைஸ்களை தேர்தல் ஆணையத்துக்கு செய்தது. இதனைத் தொடர்ந்துதான், குக்கர் சின்னம் தர முடியாது என தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதிலை ஏற்றுக்கொண்டதுடன், தினகரன் தரப்பில் வைக்கப்பட்ட பொதுச்சின்னம் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.


உத்தரவின் படி பரிசீலித்தது தேர்தல் ஆணையம். பரிசீலிக்கத்தான் சொல்லப்பட்டதே தவிர பொது சின்னம் தர வேண்டும் என உத்தரவிடவில்லை அதனால், பொதுச் சின்னம் ஒதுக்கித்தான் ஆக வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. மேலும், பதிவு செய்யப்பாடாத கட்சி என்கிற விதியை வைத்துத்தான் குக்கர் சின்னம் கிடைக்கவிடாமல் செய்தது தேர்தல் ஆணையம்.
 


அப்படியிருக்க, பதிவு செய்யப்படாத தினகரன் கட்சிக்கு பொது சின்னம் எப்படி ஒதுக்க முடியும்? பதிவு செய்யப்பட்ட பல கட்சிகளுக்கு, முந்தைய தேர்தலில் அக்கட்சிகள் போட்டியிட்ட சின்னத்தை மீண்டும் இந்த தேர்தலில் வாங்க முடியவில்லை. தருவதற்கு தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இப்படியிருக்கும் நிலையில், பதிவே செய்யாத தினகரன் கட்சிக்கு பொது சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்குகிறது எனில், தினகரனுக்காக பாஜக செய்த உதவிகளை உணர்ந்துகொள்ள வேண்டும். பாஜகவின் அழுத்தம் இல்லாமல்  தினகரனுக்கு பொதுச்சின்னம் கிடைத்திருக்காது" என விரிவாக சுட்டிக்காட்டுகிறார்கள். 


பொதுச்சின்னம் கிடைத்ததும் அமீத்சாவிற்கு தினகரன்  நன்றி தெரிவித்திருப்பதாக டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. பாஜகவின் ஸ்லீப்பர் செல்லாக தினகரன் இருப்பதாக சொல்லப்படுவது குறித்து தமிழக அரசியல் ஆய்வாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் துரைசாமியிடம் நாம் பேசியபோது, "பாஜகவுக்கு எதிரான சிறுபான்மை வாக்குகளை திசைத்திருப்ப தினகரனை  பாஜக உருவாக்கியிருப்பது ஏற்கக்கூடியதுதான். ஆனால், முக்குலத்தோர் வாக்குகளை மட்டுமே தினகரனால் பெறமுடியும். சிறுபான்மை வாக்குகள்  ராகுல்காந்தியின் பக்கம் செல்லவே அதிக வாய்ப்புண்டு " என்கிறார் அழுத்தமாக. 


தினகரனுக்கு பொதுச்சின்னம் கிடைத்தது எப்படி ? என்கிற கேள்விதான் திமுக கூட்டணி கட்சிகளிடத்தில் எதிரொலிக்கிறது.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.