Skip to main content

திட்டமிட்டு பொய் வழக்குப் பதிவு... நீதிமன்றத்தில் ஆஜரான பின்பு வேல்முருகன் பேட்டி...

Published on 16/12/2020 | Edited on 16/12/2020
 velmurugan

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்தும் வரிகொடா இயக்கம் சார்பில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள செங்குறிச்சி டோல்கேட் பகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

 

இந்த போராட்டத்தின்போது டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்டது இது தொடர்பாக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட 14 பேர்கள் மீது உளுந்தூர்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வேல்முருகனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிபதி சண்முகநாதன் அவர்கள் முன்னிலையில் வேல்முருகன் உள்ளிட்ட 8 பேர் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக மீண்டும் ஜனவரி 5ஆம் தேதிக்கு அனைவரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார். 

 

நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, டோல்கேட் சேதப்படுத்தியதாக என் மீது திட்டமிட்டுப் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். அதன் காரணமாக காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்டத்தின் துணை கொண்டு இந்த வழக்குகளிலிருந்து நான் உட்பட அனைவரும் நிரபராதி என விடுதலை செய்யப்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

 

தமிழகத்தில் தற்போது கந்து வட்டி மீட்டர் வட்டி காரணமாக அப்பாவி மக்கள், குடும்பம் குடும்பமாக உயிரிழந்து வருவது வேதனை அளிக்கிறது. விவசாயக் கடன்கள் வசூலிக்க வெளி நபர்களைக் கொண்டு விவசாயிகளை மிரட்டி வசூலித்து வருகின்றனர். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது விழுப்புரம் அருகே கந்துவட்டி கொடுமையால் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனையான ஒன்றாகும். இதுபோன்ற கந்து வட்டி மீட்டர் வட்டி வசூலிப்பவர்கள் மீது அரசும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Paytm Passtag will be invalid from tomorrow

நாளை முதல் பே.டி.எம் பாஸ்டேக் செல்லாது என மத்திய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் எளிமையாக சுங்க கட்டணங்களை செலுத்துவதற்காக பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் பே.டி.எம் பாஸ்டேக் மூலமும் சேவைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என தெரிவித்துள்ள நெடுஞ்சாலை ஆணையம், நாளைக்குள் வாடிக்கையாளர்கள் பே.டி.எம் பாஸ்டேக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் நாளை முதல் இருப்பு தொகையை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் நாளை முதல் ரீசார்ஜ் செய்ய முடியாது எனவும், அபராதமின்றி சுங்கசாவடிகளைக் கடந்து செல்ல பே.டி.எம் பாஸ்டேக் வைத்திருப்போர் வேறு வங்கிக்கு கணக்கை மாற்ற வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது.

விதிமீறல் புகாரில் சிக்கிய பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு ஆர்பிஐ ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில் ஆர்பிஐ கட்டுப்பாடுகளை தொடர்ந்து பே.டி.எம் பாஸ்டேக் வைத்துள்ளோருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த அறிவுறுத்தலை வேண்டுகோளாக விடுத்துள்ளது.

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.