Skip to main content

த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார்..!

Published on 15/01/2021 | Edited on 16/01/2021

 

TMC Senior leader Gnanadesikan passes away

 


த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். வழக்கறிஞரான ஞானதேசிகன், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்ததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அவருடன் சேர்ந்தே ஞானதேசிகன் செயல்பட்டார்.

 

த.மா.கா.வில் முக்கிய பதவிகளை வகித்துவந்தார். பின்னாளில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2012ஆம் ஆண்டு நக்கீரன் அலுவலகம் அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டபோது, தி.மு.க. தலைவராக இருந்த கலைஞர் கண்டன அறிக்கை வெளியிட்டார். அவரை தொடர்ந்து ஞானதேசிகனும் நக்கீரன் அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது கண்டன அறிக்கை வெளியிட்டார். 

 

மதிப்பு மிக்க அரசியலாளர்களில் ஒருவராகவும், பண்பாளராகவும் தமிழக அரசியலில் வலம்வந்தவர். நாடாளுமன்றத்தில் புள்ளிவிவரங்களோடு பேசி அனைவரையும் கவரக்கூடியவர். அதேபோல் சிறந்த வழக்கறிஞராக பணியாற்றியவர் ஞானதேசிகன். 

TMC Senior leader Gnanadesikan passes away  TMC Senior leader Gnanadesikan passes away
Nakkheeran MD pay Tribute to B.S.Gnanadesikan
மறைந்த ஞானதேசிகன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் அஞ்சலி செலுத்திய போது


மூப்பனார் சிபாரிசில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராக ஆகலாம் என செய்திகள் வெளியானபோது, ஜெய்ந்திநடராஜன், வாசன், தனுஷ்கோடி ஆதித்தன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்களில் யாருக்காவது ஒருவருக்கு சீட் கிடைக்கும் என பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக மூப்பனார் அந்த பதவியை ஞானதேசிகனுக்கு வழங்கினார்.  காரணம், அந்த அளவிற்கு சட்ட ஞானம் உடையவர், த.மா.கா. மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலும் அப்போது மூத்தத்தலைவராக இருந்தவர் ஞானதேசிகன். மூப்பனார் இருந்தபோதும் மூப்பனார் மறைந்த பிறகும் ஜி.கே.வாசனை தலைவராக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். மூப்பனாரை போன்று கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சி தலைவர்களுடனும் நிர்வாகிகளுடனும் நட்புடன் பழகியவர். அதுமட்டுமின்றி அனைத்து கட்சி தலைவர்களிடத்தில் நன்மதிப்பை பெற்றவர். தொலைக்காட்சி விவாதங்களில் புள்ளி விவரங்களோடு மிகவும் சிறப்பாக வாதம் செய்யக்கூடியவர்.  

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல்  இன்று காலமானார். 

 

ஞானதேசிகன் அவர்களை இழந்து வாடும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் த.மா.கா. கட்சியினருக்கு நக்கீரன் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துகொள்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“நீங்களெல்லாம் கை சின்னத்திலே...” - சமாளித்த ஜி.கே. வாசன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"You are all in the hand symbol..." - G.K. Vasan

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய 3 இடங்களில் போட்டியிடுகிறது. அதன்படி ஈரோடு - விஜயகுமார், ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால், தூத்துக்குடி - விஜயசீலன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஸ்ரீபெரும்புதூரில் அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, “வேணுகோபால் அவர்களுக்கு நீங்களெல்லாம் கை சின்னத்திலே (எனக்கூறி விட்டு) ஒரு நிமிடம் இருங்கள். கையை நகர்த்திக் கொள்ளுங்கள் என்று சொன்னேன்..” என சமாளித்தார். இச்செயல அங்கிருந்தவர்கள் மத்தியில் சிறுது நேரம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

Next Story

பக்கா பிளான்; பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக களமிறக்கிய பாஜக!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Sandeshkhali Rekha Patra announced as BJP candidate for parliamentary elections

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ளது. இதனையொட்டி பாஜக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதில் மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹட் நாடாளுமன்ற  தொகுதி வேட்பாளராக ரேகா பத்ரா அறிவிக்கப்பட்டது, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான (தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்) ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீஸில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தினர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர் போராட்டத்திற்கு பிறகு ஷாஜகான் ஷேக் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாதிக்கப்பட்ட பெண்ணான ரேகா பத்ரா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரேகாவுக்கு பாஜக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் பாசிர்ஹட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சந்தேஷ்காளி கிராமமும் இந்த தொகுதியில்தான் உள்ளது.

பாசிர்ஹட் நாடாளுமன்ற தொகுதியில் ரேகா பத்ராவுக்கு பாஜக சார்பில் வாய்ப்பு கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதே சமயம் ரேகாவுக்கு சந்தேஷ்காளி மக்கள் முழு ஆதரவு கொடுத்துள்ளனர். கடந்த 6 ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சந்தேஷ்காலி கிராமத்தை சேர்ந்த பெண்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் ரேகா பத்ராவும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ரேகா பத்ராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில்  ஆளும் கட்சிக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.